தினமலர் 29.10.2010
நாள்தோறும் ஒரு லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கல் : கலெக்டர் அலுவலகத்துக்கு மாநகராட்சி அனுமதி
சேலம் : சேலம் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்துக்கு நாள்தோறும் ஒரு லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க மாநகராட்சி ஒப்புதல் அளித்துத்துள்ளது. சேலம் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த வளாகத்தில் 52 அரசுத்துறைகள் செயல்பட உள்ளன. இங்கு பணியாற்றும் 3,000 பேரின் குடிநீர் தேவைக்காக பிரதான குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் வழங்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாநகராட்சியிடம் அனுமதி கேட்டிருந்தனர். டிபாஸிட் தொகையாக ஒரு இணைப்புக்கு ஒரு லட்சம் ரூபாயும், இரண்டு இணைப்புக்கு இரண்டு லட்சம் ரூபாயும் வசூலிக்கப்படும் என கூறப்பட்டது. மேலும், மீட்டர் கணக்கீட்டு அடிப்படையில், ஒவ்வொரு குடிநீர் குழாய் இணைப்புக்கு 1,000 லிட்டர் அளவு நீருக்கு ஐந்து ரூபாய் வீதம் நிர்ணயம் செய்து நாள்தோறும் ஒரு லட்சம் லிட்டர் வீதம் வழங்க மாநகராட்சி முன்வந்துள்ளது. நேற்று நடந்த மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோன்று, சேலம் இரும்பாலை ரோட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் பயிற்சிக் கல்லூரிக்கு மேட்டூர் குடிநீர் திட்டம் வழியோரக் கிராமம் மூலம் குடிநீர் வழங்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரியிருந்தனர். மாநகராட்சி நிர்வாகம், செவிலியர் கல்லூரிக்கு நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் வீதம் மீட்டர் கணக்கீடு செய்து வழங்கவும், 1,000 லிட்டருக்கு 20 ரூபாய் வீதம் வசூலிக்கவும் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.