தினகரன் 29.10.2010
ராசிபுரம் நகராட்சியில் தண்ணீர் பற்றாக்குறை தீர்ப்பதற்கு ரூ8 கோடியில் தனி பைப் லைன் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி தகவல்
ராசிபுரம், அக்.29: ராசிபுரம் நகராட்சியில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க ரூ8.25 கோடி செலவில் தனி பைப்லைன் அமைத்து குடிநீர் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரி கூறினார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சிக்கு தனி பைப் லைன் மூலம் குடிநீர் வழங்கும் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் வேலு பேசியதாவது:
ராசிபுரம் & பூலாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தற்போது குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பல ஊர்களுக்கு குடிநீர் பிரித்து வழங்கப்படுவதால், ராசிபுரத்துக்கு மிகக்குறைவான தண்ணீரே கிடைக்கிறது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் கண்டர்குல மாணிக்கத்தில் இருந்து ராசிபுரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை வரை ரூ8.25 கோடி மதிப்பீட்டில் புதியதாக தனி பைப் லைன் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 18.33 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் ராசிபுரம் நகராட்சிக்கு தினமும் 59.7 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும். இந்த பணிவரும் ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் முடிவடையும். இதற்காக பூலாம்பட்டி காவேரி ஆற்றில் புதிய நிரேற்று மோட்டார் நிறுவப்படும். இந்த திட்டம் நிறைவடைந்தால் ராசிபுரம் நகராட்சிக்கு குடிநீர் தட்டுபாடின்றி கிடைக்கும். இவ்வாறு வேலு பேசினார்.