Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுத்திகரிப்பு நிலையம் கட்ட இடம் தேர்வு ரூ257கோடியில் புதிய குடிநீர் திட்டம் ஈரோடு மேயர் தகவல்

Print PDF

தினகரன்              02.11.2010

சுத்திகரிப்பு நிலையம் கட்ட இடம் தேர்வு ரூ257கோடியில் புதிய குடிநீர் திட்டம் ஈரோடு மேயர் தகவல்

ஈரோடு, நவ. 2: ஈரோடு மாநகர மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யவும், சுகாதாரமான குடிநீர் வழங்கவும் ஊராட்சிகோட்டையில் இருந்து குழாய் மூலமாக குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து அதற்கான திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு முதன்முதலாக திட்டமதிப்பீடு தயாரிக்கும் போது ரூ.137 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. தற்சமயம் கட்டுமானப்பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இத்திட்டத்திற்கு ரூ.257 கோடி செலவாகும் என மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய் அமைத்து கொண்டு வரப்படும் இந்த கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் தற்போதைய மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளும், வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி, காசிபாளையம், பெரியசேமூர் நகராட்சிகளும், பி.பெ.அக்ரஹாரம், சூரியம்பாளையம் பேரூராட்சிகள், எல்லப்பாளையம், கங்காபுரம், முத்தம்பாளையம், திண்டல் ஊராட்சிகள் உள்ளிட்ட 12 உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவார்கள்.

மக்களுக்கு பெரிதும் பயனளிக்க உள்ள இக்கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக 9 ஏக்கர் நிலம் சர்வே செய்து முடிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி மேயர் குமார்முருகேஷ் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சி 45 வார்டுகளில் தற்போது 19,935 குடிநீர் இணைப்புகள் உள்ளன. தற்சமயம் ஈரோடு வைராபாளையம் பகுதியில் காவிரி ஆற்றங்கரையில் உள்ள ரிங்வெல் கிணற்றில் இருந்து குடிநீர் பம்பிங் செய்து சுத்திகரிக்கப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. காவிரி ஆற்றில் சாயக்கழிவு மற்றும் சாக்கடை கழிவுநீரும் கலப்பதால் தூய குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் ஊராட்சிகோட்டையில் இருந்து நேரடியாக குழாய் மூலம் குடிநீரை கொண்டு வரப்பட்டு மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக திட்டம் தயாரிக்கப்பட்டது.

இத்திட்டத்தின்படி ஒருங்கிணைந்த ஈரோடு மாநகராட்சியாக மாற்றம் செய்யும் போது தற்போதுள்ள குடிநீர் இணைப்புகளை விட கூடுதலாக 30 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்க முடியும். நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 135 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கவும், எதிர்காலத்தில் பெருகி வரும் மக்கள்தொகைக்கேற்ப குடிநீர் விநியோகத்தை சீரமைக்கவும் இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த தற்போது ரூ.257 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குடிநீர் திட்டப்பணிகளை நிறைவேற்றுவதற்காக ஊராட்சிகோட்டையில் 9 ஏக்கர் பரப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு நிலம் சர்வே செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான 9 ஏக்கர் அரசு ஓடைப்புறம்போக்கு நிலத்தை மாநகராட்சி நிர்வாகத்திற்கு வழங்குமாறு வருவாய்துறைக்கும், பொதுப்பணித்துறைக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதற்கான நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டதும் கட்டுமானப்பணிகள் உடனடியாக துவங்கி ஒரு ஆண்டுக்குள் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது, என்று தெரிவித்தார்.