தினகரன் 04.11.2010
தொடர் மழை எதிரொலி விருதுநகர் நகராட்சியில் வாரம் ஒரு நாள் குடிநீர் விநியோகம் அமைச்சர் தகவல்
விருதுநகர், நவ. 4: விருதுநகர் நகராட்சி பகுதி மக்களுக்கு வாரம் ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
விருதுநகர் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான ஆணைக்குட்டம் நீர்த்தேக்கத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று பார்வையிட்டார். பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
விருதுநகர் பகுதி மக்களுக்கு தற்போது 14 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக பெய்த மழையால் ஆணைக்குட்டம் நீர்த்தேக்கம், ஒண்டிப்புலி குவா ரிக்கு தண்ணீர் வந்துள்ளது. ஏற்கனவே ஆணைக்குட்டம் அணையிலிருந்து நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டது.
தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தற்போது நாள் ஒன்றுக்கு 20 லட்சம் லிட்டர் வரை குடிநீர் விநியோகம் செய்ய முடியும். ஒண்டிப்புலி குவாரியில் இருந்து நாள் ஒன்றுக்கு 10 லட்சம் லிட்டர் வரை வந்து கொண்டிருக்கிறது. எனவே நவ.8ம் தேதி முதல் விருதுநகர் பகுதி மக்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படும். மேலும் தொடர்ந்து மழை பெய்தால் 4 அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். குழாய்களிலுள்ள கசிவுகளை சரிசெய்ய திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. புதிய குழாய்கள் பதிக்கும் பணி விரைவில் துவங்கும். மேலும் குல்லூர்சந்தை, கோவிலாறு, வெம்பக்கோட்டை, ஆணைக்குட்டம் ஆகிய அணைகளில் உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.8 கோடியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
நகர்மன்ற தலைவர் கார்த்திகா, ஆணையர் ஜான்சன், துணை தலைவர் காசிராஜன், பொறியாளர் கருப்பசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.