தினமணி 23.11.2010
கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு ரூ. 47 கோடி ஒதுக்கீடு
வெள்ளக்கோவில், நவ. 22: வெள்ளக்கோவில், காங்கயம் நகராட்சிப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு ரூ. 47 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
வெள்ளக்கோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கி (படம்) அமைச்சர் பேசியது:
இந்த விழாவில் வெள்ளக்கோவில், முத்தூர், உத்தமபாளையம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 472 சைக்கிள், 59 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டா, 236 பேருக்கு இலவச டிவி என மொத்தம் ரூ. 21 லட்சத்து 32ஆயிரத்து 927 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை ரூ. 114 கோடியே 14 லட்சம் மதிப்பிலான இலவச டிவி.க்கள் வழங்கப்பட்டுள்ளன. வெள்ளக்கோவில் நகராட்சியில் ரூ. 4 கோடி செலவில் புதிய தார்ச்சாலை மற்றும் கான்கிரீட் சாலைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளக்கோவில், காங்கயம் நகராட்சிப் பகுதி மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், கொடுமுடியிலிருந்து தனிக்குழாய் மூலம் குடிநீர் பெற, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு ரூ. 47 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.