மாலை மலர் 24.11.2010
சென்னை ஏரிகளில் 1 ஆண்டுக்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ளது; பருவ மழையால் நீர்மட்டம் உயர்வு
சென்னை, நவ. 24- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29-ந்தேதி தொடங்கியது. அடிக்கடி மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
பூண்டி ஏரியின் ஒட்டு மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி. ஆகும். இந்த ஏரி யில் 2.85 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதாலும், நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதாலும் பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது. இதே அளவு தண்ணீர் வந்தால் பூண்டி ஏரி ஓரிரு நாட்களில் நிரம்பி விடும்.
ஆந்திராவில் இருந்து பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீர் கொசஸ்தலை ஆற்றின் வழியாக சோழவரம் ஏரிக்கு திருப்பி விடப்படுகிறது. ஊத்துக்கோட்டையில் உள்ள மதகின் வழியாக விநாடிக்கு 580 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் சோழவரம் ஏரியும் நிரம்பும் நிலையில் உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 0.881 டி.எம்.சி. ஆகும். இங்கு 0.650 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. வினாடிக்கு 225 கனஅடி தண்ணீர் வருகிறது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3.3 டி.எம்.சி. இங்கு 2.3 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. வினாடிக்கு 619 கன அடி தண்ணீர் வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரி யின் மொத்த கொள்ளளவு 3.64 டி.எம்.சி. இங்கு 1.9 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. வினாடிக்கு 405 கனஅடி தண்ணீர் வருகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளின் ஒட்டு மொத்த கொள்ளளவு 11.057 டி.எம்.சி. இதில் 7.73 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதைக் கொண்டு அடுத்த ஆண்டு நவம்பர் மாத இறுதி வரை சென்னை நகருக்கு குடிநீர் வழங்க முடியும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.