தினமலர் 03.12.2010
நிரம்பியது மார்லிமந்து நீர் தேக்கம் : கரையில் நடந்தது சிறப்பு பூஜை
ஊட்டி : ஊட்டி அருகேயுள்ள மார்லிமந்து நீர் தேக்கம் நிரம்பியதால், நகராட்சி சார்பில் சிறப்பு பூஜை நடந்தது.
நீலகிரியில், தென்மேற்குப் பருவ மழை பொய்த்த போதிலும், வடகிழக்குப் பருவ மழை, தாமதமாக துவங்கி தீவிரமடைந்துள்ளது; சில மாதங்களாக, தொடர் மழை பெய்கிறது. நீர்வரத்து அதிகரித்து, நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பார்சன்ஸ்வேலி, மார்லிமந்து, டைகர்ஹில், கோரிசோலா, மேல் தொட்டபெட்டா, கீழ் தொட்டபெட்டா, கோடப்பமந்து, ஓல்டு ஊட்டி மற்றும் கிளன்ராக் பகுதிகளில் உள்ள நீர் தேக்கங்களில், இருப்பு அதிகரித்து வருகிறது.
ஊட்டி மற்றும் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு நீர் வினியோகிக்க பயன்படும் பார்சன்ஸ்வேலி நீர் தேக்கம், முழு கொள்ளளவான 52 அடியை எட்டியுள்ளது; ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், நீர் தட்டுப்பாடு ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட மார்லிமந்து நீர் தேக்கம் நிரம்பியதால், நகராட்சி சார்பில், அணையின் கரையில், சிறப்பு பூஜை நடந்தது. நகராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமையில், கவுன்சிலர்கள் நாகராஜ், புஷ்பராஜ், ஜார்ஜ், சுஞ்சைய்யா, சீனிவாசன், வினோதா மற்றும் நகராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.