தினகரன் 27.12.2010
ஜப்பான் வங்கி நிதியுதவியுடன் ரூ. 13.85 கோடியில் குடிநீர் திட்டம்
குன்னூர், டிச.27:
குன்னூர் நகராட்சி பகுதியில் ஜப்பான் வங்கி நிதியுதவியுடன் ரூ. 13.85 கோடியில் புதிய குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது என நகராட்சி தலைவர் கூறினார்.
குன்னூர் நகரில் கடந்த ஓரு வாரத்திற்கு முன் தமிழக அரசின் சிறப்பு சாலை திட்டம் மற்றும் வெள்ள நிவாரண நிதி திட்டத்தின் கீழ் ரூ. 5.50 கோடி மதிப்பில் சாலை புனரமைப்பு பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இதனிடையே குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிதியுதவியுடன் ரூ. 13.85 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து நகராட்சி தலைவர் ராமசாமி கூறியதாவது:
நகரில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணி க்காக மாநில அரசு பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகளும் துவங்கி நடந்து வருகிறது.
தற்போது ஜப்பான் நாட்டு உதவியுடன் குடிநீர் மேம்பாட்டு திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.ஜப்பான் வங்கியில் இருந்து ரூ. 8.31 கோடி, வங்கி மானியமாக ரூ. 4.16 கோடி, பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பங்காக ரூ. 1.38 கோடி என மொத்தம் ரூ. 13.85 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக குடியிருப்புகளின் குடிநீர் இணைப்புக்கு வைப்பு தொகையாக ரூ. 3 ஆயிரம், பிற இணைப்பு களுக்கு ரூ. 10 ஆயிரமும், மாதாந்திர கட்டணமாக குடியிருப்புகளுக்கு ரூ. 70, பிற இணைப்புகளுக்கு ரூ. 250 என நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற கூட்டமைப்பு மற்றும் நிதி சேவை நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி நிதியாதாரத்தை பெருக்க வைப்பு தொகை, மாதாந்திர கட்டணங்களை வசூலிப்பது, இத்திட்டத்தை செயல்படுத்த குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைப்பது, மாற்றி அமைக்கப்பட்ட வைப்பு தொகை, கட்டண விகிதங்களை நடைமுறையிலுள்ள துணை விதிகளை மாற்றி திருத்தம் மேற்கொண்டு இத்திட்டத்திற்கு அனுமதி வழங்துவற்காக குன்னூர் நகராட்சியின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. மன்ற அனுமதி பெற்றவுடன் உடனடியாக இதற்கான ஆயத்த பணிகள் துவங்கும்.
இவ்வாறு நகராட்சி தலைவர் ராமசாமி கூறினார்.