Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கால அட்டவணைப்படி குடிநீர் வினியோகம்

Print PDF

தினமலர்                 01.07.2011

கால அட்டவணைப்படி குடிநீர் வினியோகம்

சேலம்: ""சேலம் மாநகராட்சியில், கால அட்டவணைப்படி குடிநீர் வினியோகம் செய்யப்படுவதை, அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும்,'' என, மாநகராட்சி கமிஷனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சியில், சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. சமீபத்தில், குடிநீர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால், குடிநீர் பிரச்னைக்கு முன்னுரிமை வழங்கி உரிய நடவடிக்கையை எடுக்க, மாவட்ட கலெக்டர் மகரபூணம், மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. முறைகேடான குடிநீர் இணைப்பு துண்டிப்பு, மின் மோட்டார் பறிமுதல் ஆகிய நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். மாநகர பகுதியில், சீரான குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் நடராஜன், குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

நேற்று காலை 8 மணிக்கு, மாநகராட்சியின் நான்கு மண்டல அலவலகங்களிலும் பணியாற்றும், குழாய் பொருத்துநர்கள்(ஃபிட்டர்கள்), டேங்க் ஆப்ரேட்டர்கள், மண்டல உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோருக்கு, மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் இருந்து திடீர் அழைப்பு விடுக்கப்பட்டது.

காலை, 8.30 மணிக்கு, 50க்கும் மேற்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மைய அலுவலகத்தில் ஆஜராகினர். மாநகராட்சி கமிஷனர் நடராஜன் தலைமையில், ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடந்தது. கூட்டத்தில், மாநகராட்சி அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய பல்வேறு வழிமுறைகள் குறித்து, விளக்கப்பட்டது.
கூட்டம் குறித்து மாநகராட்சி கமிஷனர் நடராஜன் கூறியதாவது:

சேலம் மாநகராட்சியில், ஒரு வாரமாக, கால அட்டவணைப்படி குடிநீர் வினியோகம் செய்வது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதற்கான அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. எந்த வார்டில், எந்த தேதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது, என்ற விவரத்தை குழாய் பொருத்துநர்கள், டேங்க் ஆப்ரேட்டர்கள், உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோர் முறையாக பதிவு செய்ய வேண்டும்.

குடிநீர் வினியோகம் செய்யும் போது, சம்மந்தப்பட்ட வார்டில் மண்டல அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் நேரடியாக சென்று குடிநீர் வினியோகம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணியில், அலட்சியல் காட்டினால், சம்மந்தப்பட்டவர்கள் மீது, "சஸ்பெண்ட்' உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.