தினமணி 04.08.2012
குடிநீர்ப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: திருவண்ணாமலை நகர்மன்றத் தலைவர் உறுதி
திருவண்ணாமலை, ஆக. 3: திருவண்ணாமலை நகராட்சிப் பகுதியில் நிலவும் குடிநீர்ப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று நகர்மன்றத் தலைவர் என்.பாலச்சந்தர் உறுதி அளித்தார்.
திருவண்ணாமலை நகர்மன்றத்தின் அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகர்மன்றத் தலைவர் என்.பாலச்சந்தர் தலைமை வகித்தார். பொறியாளர் பாஸ்கரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் குட்டி புகழேந்தி, திருவண்ணாமலை நகரில் நிலவும் குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதாக கடந்த முறை நடைபெற்ற கூட்டங்களில் கூறினீர்கள். ஆனால், இதுவரை தீர்வு காணப்படவில்லை என்றார்.
இதற்குப் பதிலளித்த நகர்மன்றத் தலைவர், நகராட்சியின் 26 வார்டுகளில் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டு விட்டது. மீதமுள்ள 13 வார்டுகளில் நிலவும் குடிநீர்ப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.
திருவண்ணாமலையில் காலரா பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நகரின் கழிவுநீர் கால்வாய்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் தூர் வாரப்படும். கொசு மருந்து அடிக்கப்படும். நகராட்சி நவீன எரிவாயு தகன மேடையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகர்மன்றத் தலைவர் உறுதி கூறினார்.