Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேவை 203 சப்ளை 128 மில்லியன் லிட்டர் புதிய அணை கட்டினால் மதுரை பிழைக்கும் குடிநீருக்கு வரப்போகுது பஞ்சம்!

Print PDF

தினகரன்   07.08.2012

தேவை 203 சப்ளை 128 மில்லியன் லிட்டர் புதிய அணை கட்டினால் மதுரை பிழைக்கும் குடிநீருக்கு வரப்போகுது பஞ்சம்!

மதுரை, : மாநகராட்சி எல்லை விரிவாக்கத்திற்கு பிறகு குடிநீர் தேவை நாள் ஒன்றுக்கு 203 மில்லியன் லிட்டராக அதிகரித்துள்ளது. ஆனால், 128 மில்லியன் லிட்டர்தான் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் புதிய குடிநீர் திட்டங்களை உருவாக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. வைகை அணை அருகே குடிநீருக்காக உருவாக்கப்பட்ட புதிய அணை கட்டும் திட்டம் விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும் என பொறியாளர்கள் கருதுகின்றனர்.

மதுரை மாநகராட்சியுடன் 3 நகராட்சி, 3 பேரூராட்சி, 11 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு 100 வார்டுகளாக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் தொகை 15 லட்சமாக உயர்ந்துள்ளது. மாநகராட்சி பகுதிகளில் நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 135 லிட்டர் வீதம் குடிநீர் சப்ளை செய்யவேண்டும். அதன்படி ஒரு நாள் தேவை 203 மில்லியன் லிட்டர். ஆனால் தற்போது பழைய 72 வார்டுகளுக்கே தினமும் 103 லிட்டர் வழங்கப்படுகிறது. விரிவாக்க பகுதிகளுக்கு அதை விட குறைவாகவே கிடைக்கிறது.

நூறு வார்டுகளுக்கும் சேர்த்து மொத்தம் தினமும் 128 மில்லியன் லிட்டர் சப்ளை செய்யப்படுகிறது. தற்போதைய நிலையில் 75 மில்லியன் லிட்டர் பற்றாக்குறை உள்ளது. மதுரை குடிநீருக்கு வைகை அணையில் ஆண்டுக்கு ஆயிரத்து 500 மில்லியன் கன அடி ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் தினமும் 115 மில்லியன் லிட்டர் குழாய் மூலம் நேரடியாக வருகிறது. இதுதவிர, வைகை ஆற்று படுகையில் உறை கிணறு தோண்டி எடுக்கப்படுகிறது. ஆற்றில் வறட்சி ஏற்படும்போது உறை கிணறுகள் வற்றி விடுகிறது. இப்போதுள்ள நிலையில் குடிநீர் தேவையை ஈடுகட்ட முடியவில்லை.

நூறு வார்டுகளுக்கும் எதிர்கால குடிநீர் தேவைக்கு இன்னும் கூடுதலாக 278 மில்லியன் லிட்டர்தேவைப்படும் நிலை உள்ளது. அல்லது 3 ஆயிரத்து 500 மில்லியன் கன அடி நீருக்கான குடிநீர் ஆதாரம் கண்டறியப்பட வேண்டும். எனவே, தகுந்த குடிநீர் ஆதாரத்தை தேர்வு செய்யவும், குடிநீர் அபிவிருத்தி திட்டம் தயாரிக்கவும் ஆலோசனை குழு நியமிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் மாநகராட்சி பகுதிக்கு சிறிதளவே கிடைக்க வாய்ப்புள்ளது. மழை காலங்களில் வைகை அணை நிரம்பி உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டு கடலில் வீணாகிறது.

எனவே, வைகை அணை அருகே ஜெயமங்கலத்தில் புதிய அணை கட்ட திட்டம் உருவாக்கப்பட்டது. வைகையில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிரம்பும் தண்ணீர் புதிய அணையில் தேங்கும். இதற்காக இணைப்பு கால்வாய் அமைத்துக் கொள்ளமுடியும். இதற்கான மாதிரி வரைபடத்தை பொதுப் பணித்துறை பொறியாளர்கள் தயாரித்து அரசுக்கு அனுப்பி உள்ளனர். இந்த அணை திட்டம் நிறைவேறினால், மதுரை மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் குடிநீர் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.