தினமணி 08.08.2012
சாத்தான்குளத்தில் குடிநீர் பற்றாக்குறை: சிறப்பூர் திட்டம் தொடக்கம்
சாத்தான்குளம், ஆக. 7: சாத்தான்குளம் பேரூராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க சிறப்பூர் குடிநீர் திட்டம் மீண்டும் புனரமைப்பு செய்யப்பட்டது.
சாத்தான்குளம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள மக்களுக்கு பொன்னன்குறிச்சியிலிருந்து சாத்தான்குளம்-உடன்குடி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் போதிய மழை இல்லாததால் ஸ்ரீவைகுண்டம் அணையில் தண்ணீர் வறண்டதால் பொன்னன்குறிச்சியிலும் உள்ள ஆழ்துளைகளிலும் தண்ணீர் வற்றியது.
இதனால் சாத்தான்குளத்துக்கு குடிநீர் வழங்குவது பாதிக்கப்பட்டது. ஏற்கெனவே கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்குவதற்கு முன் சிறப்பூர் குடிநீர் திட்டத்தின் மூலம் இப்பகுதிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
நாளடைவில் அவை தூர்ந்து போனதால் அங்கிருந்து வழங்கப்படுவது நிறுத்தம் செய்யப்பட்டது.தற்போது கூட்டுக் குடிநீர் திட்டத்தில் தண்ணீர் குறைந்து போனதால் பேரூராட்சி மூலம் துரித நடவடிக்கையால் சிறப்பூர் குடிநீர் திட்டம் புனரமைப்பு செய்யப்பட்டது.
பின்னர் சிறப்பூரில் மேலும் 4 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு சாத்தான்குளம் மக்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.அதன்படி மீண்டும் சாத்தான்குளம் மக்களுக்கு தற்போது தினமும் ஒரு மணி நேரம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
சிறப்பூர் குடிநீர் திட்டத்தை மீண்டும் செயல்படுத்திய பேரூராட்சித் தலைவர் ஆ.செ.ஜோசப், செயல் அலுவலர் முருகேசன் மற்றும்மன்ற உறுப்பினர்களை பொதுமக்கள் பாராட்டினர்.