தினமலர் 10.08.2012
டைமன்ட்நகர் பகுதி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி டைமன்ட் நகர் பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று மேயர் உடனடியாக குடிநீர் வசதி செய்து கொடுக்க உத்தரவிட்டார். இதற்காக நடந்த குடிநீர் பணிகளை மேயர் ஆய்வு செய்தார்.
முன்பு மீளவிட்டான் பஞ்சாயத்து பகுதியாக இருந்தது டைமன்ட்நகர். இந்த பகுதியில் சுமார் 60 வீடுகள் வரை உள்ளன. இந்த பகுதி மக்களுக்கு கோரம்பள்ளம் குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக குடிநீர் பைப்பில் உடைப்பு ஏற்பட்டு மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் இருந்து வந்தது. இதனால் மக்கள் குடிநீருக்கு கஷ்டப்பட்டு வந்தனர்.இந் நிலையில் இந்த பகுதி மக்கள் குடிநீர் பிரச்னை குறித்து மாநகராட்சி மேயர் சசிகலாபுஷ்பாவிடம் முறையிட்டனர். உடனடியாக டைமன்ட் நகர் பகுதிக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கவும், உடைந்த பைப்புகளை மாற்றி சீரான குடிநீர் சப்ளைக்கு ஏற்பாடு செய்யுமாறு மாநகராட்சி இளநிலை பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரனுக்கு மேயர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து உடனடியாக 75 ஆயிரம் ரூபாய் செலவில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே கொடுக்கப்பட்டு வந்த குடிநீர் திட்டத்தில் இருந்து புதிய குழாய்கள் போடப்பட்ட டைமன்ட் நகரில் 5 பொது நல்லிகள் வைக்கப்படுகிறது.
இதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியினை மேயர் சசிகலாபுஷ்பா ஆய்வு செய்தார்.