தினகரன் 10.08.2012
சிறுவாணி நீர்மட்டம் 1.20மீ. உயர்ந்தது
கோவை, : கனமழையால் சிறுவாணி நீர்மட்டம் 1.20 மீட்டர் உயர்ந்தது.மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சிறுவாணி நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த 6ம் தேதி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் 40 மி.மீ மழை பெய்தது. கடந்த 8ம் தேதி 50 மி.மீ மழையும், நேற்று 35 மி.மீ மழையும் பெய்தது. கடந்த 6ம் தேதி அணையின் நீர்மட்டம் 866.10 மீட்டராக (கடல் மட்ட உயர கணக்கின் படி) இருந்தது. நேற்று அணையின் நீர்மட்டம் 867.30 மீட்டராக உயர்ந்தது.இரண்டு நாளில் அணையின் நீர்மட்டம் 1.20 மீட்டர் உயர்ந்துள்ளது. அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 15 மீட்டர். இதில் நில மட்டத்தில் இருந்து 3.80 மீட்டர் உயரத்திற்கு மட்டுமே நீர் தேங்கியிருக்கிறது. அணை நிரம்ப, நீர் மட்டம் 11.20 மீட்டர் அளவிற்கு உயரவேண்டும். இன்னும் 1120 மி.மீ அளவிற்கு மழை பெய்தால் மட்டுமே அணை நிரம்ப வாய்ப்புள்ளது. கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமாக இருக்கிறது. சில நாட்களுக்கு மழை நீடிக்கும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனவே சிறுவாணி அணை நீர் பிடிப்பு பகுதியில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதுள்ள குடிநீரை இன்னும் ஒரு மாத காலத்திற்கு பயன்படுத்த முடியும். அணை நீர் மட்டம் 7 மீட்டர் உயர்ந்தால் மட்டுமே நடப்பாண்டு இறுதி வரை குடிநீர் தேவையை சமாளிக்க முடியும். அடுத்த ஆண்டு கோடை காலம் மற்றும் தென் மேற்கு பருவ மழை துவக்கம் வரை குடிநீர் தேவையை சமாளிக்க அணை உச்ச மட்டத்தை எட்டவேண்டும். வழக்கமாக, வடகிழக்கு பருவ மழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்யாது. தென்மேற்கு பருவ மழையும் அடுத்த மாதத்துடன் ஓய்ந்து விடும்.எனவே அணை நிரம்பும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது.