தினமலர் 13.08.2012
ரூ.132.12 கோடி தனிக்குடிநீர் திட்ட பணி
சேலம்: சேலம் மாநகரில், தனிக்குடிநீர் திட்டத்துக்காக, 132.12 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டாம் கட்ட பணிகளை, அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி நேற்று துவக்கி வைத்தார்.சேலம் மாநகருக்கு, 320.54 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்ட, தனிக் குடிநீர் திட்டத்தில், முதல் கட்டமாக, 188.42 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நிறைவு பெறும் நிலையில், இரண்டாம் கட்டமாக, 132.12 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நேற்று துவங்கப்பட்டன.அதன் ஒரு பகுதியாக, சேலம், மாமாங்கத்தில் இருந்து, 67.385 கி.மீ., தூரத்துக்கு, 44.1 கோடி ரூபாய் மதிப்பில், துணை பிரதான குழாய்கள் பதிக்கும் பணிக்கான பூமிபூஜை நேற்று நடந்தது. அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி தலைமை வகித்து பூமிபூஜை செய்து, பணியை துவக்கி வைத்தார்.தொடர்ந்து, மாநகர பகுதிகளில், 32.85 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக, 22 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைப்பதற்கான பூமிபூஜை, களரம்பட்டியிலும், 47.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக பகிர்மான குழாய்கள் பதிக்கவும், 2.5 கோடி ரூபாய் மதிப்பில், குடிநீர் அளவை கம்ப்யூட்டரில் கண்காணிக்கவும், பராமரிப்பு மற்றும் இதர பணிக்கான, 2.5 கோடி மதிப்பு வேலைக்கான பூமிபூஜையை அம்மாபேட்டையிலும், அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.மூன்று நிலையாக மேற்கொள்ளப்படும் தனிக்குடிநீர் திட்ட இரண்டாம் கட்டப்பணிகளை, 18 மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தனிக்குடிநீர் திட்டம் அமலுக்கு வந்ததும், மாநகர பகுதியில், தினசரி, ஒரு நபருக்கு, 135 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம், குமாரசாமிபட்டி ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு அருகே, 39.50 லட்சம் ரூபாய் மதிப்பில், ஐந்து படுக்கை வசதி கொண்ட மகப்பேறு மருத்துவமனையையும், கிச்சிப்பாளையம் பகுதியில், 39.95 லட்சம் ரூபாய் மதிப்பில், எட்டு படுக்கை வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்ட மகப்பேறு மருத்துவமனையையும், அமைச்சர் திறந்து வைத்தார்.கலெக்டர் மகர பூஷணம், எம்.பி. செம்மலை, எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், வெங்கடாசலம், மாநகராட்சி கமிஷனர் அசோகன், மேயர் சவுண்டப்பன், துணை மேயர் நடேசன், நிர்வாக பொறியாளர் காமராஜ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.