தினமலர் 14.08.2012
பாளை., முருகன்குறிச்சியில் சீரான குடிநீர் வழங்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு
திருநெல்வேலி:பாளை., 8வது வார்டு முருகன்குறிச்சி பகுதியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் விஜிலா உத்தரவிட்டார்.
பாளை., முருகன்குறிச்சி 8வது வார்டு தேவபிரான் தெரு, கடவுள் தெரு, இறைவன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் இல்லை எனக்கூறி பெண்கள் நேற்று முன்தினம் ரோடு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் மக்கள் ஈடுபட்டதை தொடர்ந்து நேற்று காலை அந்தப்பகுதிக்கு மேயர் விஜிலா, நகரப்பொறியாளர் ஜெய்சேவியர், உதவிக் கமிஷனர் ஜான் கென்னடி, உதவி செயற்பொறியாளர் சாமுவேல் செல்வராஜ், உதவிப்பொறியாளர் கருப்பசாமி, கவுன்சிலர் கோமதிநாதன் ஆகியோர் அந்தப்பகுதியில் ஆய்வு செய்தனர். குடிநீர் வராததற்குரிய காரணங்களை கண்டறிந்து, குழாய்களை சீரமைத்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு மேயர் விஜிலா உத்தரவிட்டார்.