தினமணி 16.08.2012
துறையூர் நகராட்சிக்குள் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க உத்தரவு
துறையூர், ஆக. 15: துறையூர் நகராட்சி பகுதிக்குள் தேவையான இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீமுரளிதரன் உத்தரவிட்டிருப்பதாக ஆணையர் சி. மதிவாணன் புதன்கிழமை தெரிவித்தார்.
சுதந்திர தினவிழாவையொட்டி, துறையூர் நகராட்சி அலுவலகத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவர் கூறியது: துறையூர் நகரில் 20 லட்சம் லிட்டர் காவிரி கூட்டு குடிநீர் ஒருநாள் விட்டு ஒருநாள் வழங்கப்படுகிறது. காசிக்குளம், பெரிய ஏரி ஆழ்குழாய் கிணறு மூலம் ஒரு நாளைக்கு 19 லட்சம் லிட்டர் எடுக்கப்பட்டு நகரில் தினமும் வழங்கப்படுகிறது. காவிரி குடிநீர் விநியோகம் சீராக இருக்க குடிநீர் வடிகால் வாரியத்தினர் 125 கேவி ஜெனரேட்டரை நகர்மன்ற அலுவலகத்தினுள் பொருத்தியுள்ளனர். மழையில்லாததால், ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. எனவே, நீரேற்றுவதற்கும் தாமதம் ஆகிறது. மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி, நகராட்சி பகுதியில் 14 இடங்களில் நகராட்சி பொது நிதி ரூ. 22 லட்சம் செலவில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு வருகிறது என்றார்.