Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிறுவாணி திட்டத்தில் குடிநீர் குழாய் வால்வு மாற்ற திட்டம்

Print PDF

தினகரன்    16.08.2012

சிறுவாணி திட்டத்தில் குடிநீர் குழாய் வால்வு மாற்ற திட்டம்

கோவை, : பழுதடைந்த சிறுவாணி பிரதான குடிநீர் குழாய் வால்வுகளை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.சிறுவாணி அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அணை நீர் மட்டம் குறைந்து விட்டதால் தற்போது தினமும் 7.2 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது. அணை நீரேற்று நிலையத்தில் பெறப்படும் குடிநீர், 9 கி.மீ மலைப்பாதை நீரோடை வழியாக சிறுவாணி அடிவாரம் வரை கொண்டு வரப்படுகிறது.

சிறுவாணி அடிவாரத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் நீரை சுத்திகரித்து 1000 மி.மீ விட்டம் கொண்ட பிரதான குழாய் மூலமாக கோவை பாரதிபார்க் மற்றும் காந்திபார்க் மேல் நிலை தொட்டிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.பிரதான குழாய் சிறுவாணி அடிவாரத்தில் இருந்து பாரதிபார்க் மற்றும் காந்திபார்க் வரை 37 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.

பிரதான குழாயில் பல இடங்களில் வால்வு பழுதடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. குறிப்பாக இருட்டுப்பள்ளம், ஆலாந்துறை, மத்வராயபுரம், பூலுவப்பட்டி, மாதம்பட்டி உள்ளிட்ட பகுதியில் வால்வு பழுதடைந்து காணப்படுகிறது. இந்த வால்வுகளை மாற்றாமல் விட்டதால் தினமும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி சாக்கடையில் கலக்கிறது. இதை தவிர்க்க, பிரதான குடிநீர் குழாய் வால்வுகளை மாற்ற குடிநீர் வடிகால் வாரியம் திட்டமிட்டுள்ளது.

குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூறுகையில், ‘‘ சிறுவாணி பிரதான குழாய் அமைத்து 30 ஆண்டுகளாகி விட்டது. பழுதடைந்த வால்வுகள் சிறுவாணி அடிவாரத்தில் இருந்து பாரதிபார்க் வரை சரி செய்யப்படும். ஆலாந்துறை, மத்வராயபுரம் உட்பட 10 இடங்களில் வால்வு பழுதடைந்து விட்டது.இந்த வால்வு அகற்றப்பட்டு புதிதாக வால்வு அமைக்கப்படும். இதற்காக 19.88 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் வால்வு மாற்றும் பணி நடத்தப்படும்.  பில்லூர் முதல் திட்டத்தில், வெள்ளியங்காடு கட்டன் மலைப்பகுதியில் பிரதான வால்வு பழுதடைந்து விட்டது. இதனை 9.90 லட்ச ரூபாய் செலவில் மாற்றி அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இது தவிர, ஈச்சனாரி ரயில் பாதை பகுதியில் பில்லூர் குடிநீர் திட்ட குழாய் (450 மி.மீ விட்டம் கொண்டது) பழுதடைந்துள்ளது. இந்த பகுதியில் மேம்பால பணியும் நடக்கிறது. இந்த குழாய்களை மாற்றி வேறு இடத்தில் அமைக்க 11.94 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவக்கப்படும், ’’ என்றனர்.