தினமலர் 20.08.2012
ரூ.30 லட்சத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் கலங்கல் சீரமைப்பு
செம்பரம்பாக்கம்:சென்னைவாசிகளுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கலங்கல் சீரமைக்கும் பணிகள் துவங்கப் பட்டு உள்ளன. பருவ மழைக்கு முன் இப்பணிகளை முடிக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.மொத்தம் 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி, 24 அடி நீர்மட்டம் கொண்டது. செம்பரம்பாக்கம் ஏரியின் கலங்கல் பகுதி பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதனால் கருங்கற்கள் பெயர்ந்து, கலங்கல் முழுவதும் சிதிலமடைந்து காணப்பட்டது.ஏரியில் தற்போதுள்ள கலங்கலை அகற்றி, கான்கிரீட் மூலம் புதிய கலங்கல் அமைக்க பொதுப் பணித் துறை திட்டமிட்டது. இதற்காக 30 லட்சம் ரூபாய் செலவில் தற்போது பணிகள் துவங்கப் பட்டு உள்ளன.
பழைய கற்களை அகற்றும் பணிகள் துவங்கி உள்ளன. இரும்பு கம்பி மூலம் கான்கிரீட் தளம் அமைத்து, புதிய கலங்கல், அடுத்த மாத இறுதிக்குள் கட்டும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப் பட்டு உள்ளதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில், கிருஷ்ணா நதிநீர் வருகை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.நேற்றைய நிலவரப்படி புழல் ஏரியில் இருந்து செம்பரம்பாக்கத்திற்கு வினாடிக்கு 259 கனஅடி அளவில் நீர்வரத்து காணப்பட்டது. ஏரியின் மொத்தம் கொள்ளளவு 1302 மில்லியன் கனஅடியாகவும், நீர்மட்டம் 13.7 அடியாகவும் இருந்தது.கிருஷ்ணா நீர்வரத்து தொடரும் பட்சத்தில், பருவ மழைக்கு முன் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.