Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

லாரிமூலம் மாநகராட்சி வழங்கும் குடிநீருக்கு கட்டணம் கொடுக்க வேண்டாம்

Print PDF

தினமலர்              24.08.2012

லாரிமூலம் மாநகராட்சி வழங்கும் குடிநீருக்கு கட்டணம் கொடுக்க வேண்டாம்

தூத்துக்குடி:மாநகராட்சி மூலம் புதியதாக இணைக்கப்பட்ட பஞ்சாயத்து பகுதிக்கு வழங்கும் குடிநீரை குடத்திற்கு ஒரு ரேட் வைத்து சிலர் வசூல் செய்கிறார்கள். இது மிகப் பெரிய குற்றமாகும். குடத்து தண்ணீர் பிடிக்க மக்கள் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம் என்று மாநகராட்சி கமிஷனர் மதுமதி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியோடு இணைக்கப்பட்ட மீளவிட்டான், சங்கரப்பேரி, தூத்துக்குடி ரூரல், முத்தையாபுரம், அத்திமரப்பட்டி ஆகிய இடங்களுக்கு மாநகராட்சி மூலம் லாரிகள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சில விஷமிகள் லாரியில் மக்கள் தண்ணீர் பிடிக்கும் போது ஒரு குடத்திற்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று பணம் வசூலித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கான புகார் மாநகராட்சி கமிஷனர் மதுமதிக்கு வந்தது. இது குறித்து கமிஷனர் மதுமதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மாநகராட்சியோடு இணைந்துள்ள பகுதிக்கு மாநகராட்சியில் இருந்து கட்டாயம் குடிநீர் வழங்க வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தோடு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் சிலர் அந்த லாரி தண்ணீரை மக்கள் பிடிக்க வரும்போது ஒரு குடத்திற்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று கட்டணம் வசூல் செய்வதாக தகவல் வந்துள்ளது. அவ்வாறு கட்டணம் யாரும் கேட்டால் மக்கள் கொடுக்க வேண்டாம். மாநகராட்சி தான் லாரிகளுக்கு கட்டணம் செலுத்தி மக்களுக்கு இலவசமாக தண்ணீர் வழங்குகிறது. இதில் யாருக்கும் பணம் தரத்தேவையில்லை.

இதனால் ஒரு குடத்திற்கு இவ்வளவு ரூபாய் என்று கேட்பவர் பற்றிய தகவலை மாநகராட்சிக்கு பொதுமக்கள் 0461-2326902 அல்லது 2326901 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். ஐந்து பஞ்சாயத்து பகுதிகளுக்கு குடிநீர் லாரி என்று வரும் என்கிற அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் மாநகராட்சி இணையதளம் அல்லது மாநகராட்சி அலுவலகம், ராஜாஜிபூங்கா நீர்தேக்க நிலையத்தில் மக்கள் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு மதுமதி தெரிவித்தார்.