தினமலர் 28.07.2012
விழுப்புரம் நகராட்சியில் குடிநீர் குழாய் சீரமைப்பு
விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி குடிநீர் குழாய் சீரமைக்கும் பணியை சேர்மன் பாஸ்கரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விழுப்புரம் நகராட்சிக்கு எல்லீஸ்சத்திரம் தென்பெண்ணையாற்றிலிருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. விழுப்புரம் வீரவாழியம்மன் கோவில் அருகே பாதாள சாக்கடை பணியின் காரணமாக முதன்மை குடிநீர் குழாயில் நேற்றிரவு 10 மணிக்கு திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் முழுவதும் வெளியேறி வீணாகியதால், நகராட்சி பகுதியில் நேற்று குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டது.இந்நிலையில் சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கும் பணி நேற்று காலை சேர்மன் பாஸ்கரன் மேற்பார்வையில் நடந்தது. இரண்டு மினி ஜெனரேட்டர் மூலம் குழாய்கள் அமைத்து குழாய் சேதமடைந்த பள்ளத்தில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. பின்னர் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பழைய குழாய் அப்புறப்படுத்தப்பட்டு புதிய குழாய் இணைக்கப்பட்டது.நகராட்சி பொறியாளர் பார்த்தீபன், ஓவர்சீயர் ஜெய்பிரகாஷ் நாராயணன், கவுன்சிலர் நாராயணசாமி மற்றும் உதவியாளர் இளங்கோ உடனிருந்தனர்.