தினமணி 28.08.2012
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு: புதிய ஆணையர் உறுதி
வேலூர், ஆக.27: வேலூர் மாநகராட்சி பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் கூறினார்.
வேலூர் மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த சீனி.அஜ்மல்கான் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து வேலூர் மாநகராட்சி ஆணையராக ஜானகி ரவீந்திரன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் ஏற்கெனவே தஞ்சாவூர் நகராட்சி ஆணையராகப் பணிபுரிந்து வந்தார்.
வேலூர் மாநகராட்சியின் மேம்பாட்டுக்கான அனைத்து வகையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். நகரில் நிலவும் குடிநீர் பிரச்னை, சுகாதார சீர்கேட்டை விளைவுக்கும் குப்பைகள் ஆகியவற்றுக்கு உரிய தீர்வு காண முயற்சி எடுக்கப்படும்.
மாநகராட்சி இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளோர் மீதான நடவடிக்கை தொடரும். பொதுமக்கள் அலுவலக நாள்களில் காலை 11 முதல் மதியம் 1 மணி வரை நேரில் சந்தித்துக் குறைகளை தெரிவிக்கலாம் என்றார் ஆணையர்.