தினகரன் 03.09.2012
ரூ.5லட்சத்தில் குடிநீர் வசதி
உடுமலை, : உடுமலை அருகே உள்ள சங்கராமநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ருத்ராபாளையம், குப்பம்பாளையம், சமத்துவபுரம், ஆத்தூர், புதுநகரம், நல்லண்ணகவுண்டன்புதூர், மடத்தூர், மயிலாபுரம் கிராமங்களில் அமராவதி கூட்டு குடிநீர் திட்டத்தின் தினசரி 10 லட்சம் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
ஆனால் குப்பம்பாளையம் கிராமத்துக்கு சரிவர குடிநீர் கிடைக்கவில்லை. இங்கு 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து, இந்த கிராமத்துக்கு மட்டும் ருத்ராபாளையம் அமராவதி ஆற்றங்கரையில் இருந்து தனி பைப் லைன் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
பேரூராட்சி சார்பில் ரூ.5 லட்சம் செலவில் தனி குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும், குப்பம்பாளையத்துக்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும் என பேரூராட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.