தின மலர் 27.02.2013
கட்டி முடித்து இரண்டு ஆண்டாகியும் திறக்கப்படாத நீர்தேக்க தொட்டி
ஆலந்தூர்: வால்வு பொருத்தாததால், இரண்டு ஆண்டுகளாக திறக்காமல் இருக்கும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை திறக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
ஆலந்தூர் மண்டலம், 158வது வார்டு, பர்மா காலனி பகுதியில், 2010ல், நந்தம்பாக்கம் பேரூராட்சியாக இருந்தபோது, 7.75 லட்சம் ரூபாய் செலவில், 2 லட்சம் கொள்ளளவு கொண்ட, மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
ஆனால், இதுவரை திறக்கப்படவில்லை.மாநகராட்சியுடன் இணைந்த பின்னும், நீர்தேக்க தொட்டி திறக்கப்படாததால், பர்மா காலனி மக்கள், நீண்ட தூரம் சென்று, குடிநீர் எடுத்து வருவது தொடர்கிறது. கீழ்நிலை நீர்தேக்க தொட்டி நீரை, மேல்நிலை தொட்டியில் ஏற்றாததால், கீழ்நிலை தொட்டியில் நிரம்பி வழியும் நீர், வீணாக அடையாறு ஆற்றில் கலக்கிறது.மேல்நிலை தொட்டியில் செல்லும் குழாயில், வால்வு பொருத்த வேண்டிய பணி மட்டுமே மிச்சம் உள்ளது. அதைச் செய்ய, குடிநீர் வாரியம் காலம் தாழ்த்தி வருவதாக, பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, பர்மா காலனியை சேர்ந்த சரஸ்வதி கூறியதாவது:இந்த நீர்த்தேக்க தொட்டியை நம்பி தான், எங்கள் காலனி மக்கள் உள்ளனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பொருத்த வேண்டிய வால்வுக்கு, 3,000 ரூபாய் தான் செலவாகும். அதை கூட, மெட்ரோ அதிகாரிகளால் வாங்க முடியவில்லையோ.இவ்வாறு, அவர் கூறினார்.