Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் விநியோகத்தை சீர்படுத்த வேண்டும்

Print PDF
தின மணி           27.02.2013

குடிநீர் விநியோகத்தை சீர்படுத்த வேண்டும்


கோடை காலத்தை கருத்தில் கொண்டு குடிநீர் விநியோகத்தை சீர்படுத்தவும், ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திருப்பூர் மாநகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

திருப்பூர் மாநகராட்சிக் கூட்டம் மேயர் அ.விசாலாட்சி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணை மேயர் சு.குணசேகரன், ஆணையர் செல்வராஜ், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இதில் கவுன்சிலர்கள் பேசியது:

முருகசாமி (அதிமுக): கோடைகாலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணிமனைக்கு செல்லும் குப்பை லாரிகள், வாகனங்கள் பழுது நீக்கம் செய்வதில் ஏற்படும் காலதாமதத்தினால் வீதிகளில் குப்பை தேங்குகிறது. இப்பணியை விரைவாக முடித்து குப்பை அகற்றும் பணிக்கு வாகனங்களை பயன்படுத்த வேண்டும்.

பல இடங்களில் மின் கம்பங்கள் பழுதாகி சாய்ந்து விழும் நிலையில் உள்ளன. இது தொடர்பாக மின் வாரிய அதிகாரிகளிடம் பேசி மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வார்டில் தண்ணீர் விநியோகத்திற்கு பிளாஸ்டிக் டேங்க் வைப்பதில் கூட காலதாமதம் செய்கின்றனர்.

சுப்பிரமணியம் (திமுக): முதல் குடிநீர் திட்டத்தில் பிப்.2-ஆம் தேதி ஏற்பட்ட பழுது சரி செய்வதற்கு 8 நாள்கள் ஆகி உள்ளன. இதனால் 3.20 கோடி லிட்டர் குடிநீர் மக்களுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டது.

க.மாரப்பன் (சி.பி.எம்.): மண்டலத்திற்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குடிநீர் கசிவு சரி செய்யும் வேலைக்கு உரிய தொகை தரப்படாமல் இருப்பதால் பிளம்பர்கள் மேற்கொண்டு குடிநீர் கசிவு பணிகளை செய்ய முன் வருவதில்லை. இதனால் குடிநீர் பிரச்னை ஏற்படுகிறது.

ரவிச்சந்திரன் (சி.பி.ஐ.): அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால் பல்வேறு பணிகள் முடங்கி உள்ளன. கடந்த 2011-12-ஆம் ஆண்டில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து 3 இடங்களில் குடிநீர் தொட்டி கட்டுவதற்காக அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இதுவரை அப்பணிகள் தொடங்கப்படவில்லை. குடிநீர் விநியோகத்தை கண்காணிப்பதற்கென தனியாக அதிகாரியை நியமித்து, குடிநீர் விநியோகத்தை சீர்படுத்த வேண்டும்.

கோவிந்தராஜ் (தேமுதிக): மாநகராட்சியின் ஒட்டுமொத்த கட்டடப் பணிகளில் தரம் இல்லை என புகார் எழுந்துள்ளது. இப்பணிகளை தரத்துடன் செய்ய வேண்டும்.

செல்வராஜ் (ஆணையாளர்): கோடைகாலத்தில் வறட்சியை சமாளிக்க, தற்போது 3 குடிநீர் திட்டங்களில் பெறப்படும் 89 எம்.எல்.டி (ஒரு எம்.எல்.டி. என்பது 10 லட்சம் லிட்டர்) குடிநீர் தவிர்த்து மாற்று உபயோகத்திற்காக ஆழ்குழாய் கிணறுகளை செப்பனிடுவது, புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள 4 மண்டலத்திற்கும் மொத்தம் ரூ.8.9 கோடியில் மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.

4 ஆவது குடிநீர் திட்டம் குறித்து புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகம் மூலமாக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. 3 ஆவது குடிநீர் திட்டத்தில் மேலும் 29 எம்.எல்.டி. குடிநீர் வழங்க தயாராக உள்ளனர். இது குறித்து மாமன்றம் முடிவு செய்தால் இத்திட்டத்தில் கூடுதலாக குடிநீர் பெற்று விநியோகிக்க முடியும்.

முருகசாமி (அதிமுக): 2 ஆவது குடிநீர் திட்டத்தில் கூடுதலாக குடிநீர் பெறும் வகையில் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் மாநகராட்சி மூலமாக செக் டேம் அமைத்து குடிநீர் பெறலாம். 3 ஆவது திட்டத்தில் பெறப்படும் குடிநீருக்கான கட்டணத்தை காட்டிலும் இதில் செலவு குறைவு.

மேயர் அ.விசாலாட்சி: கவுன்சிலர்கள் குறிப்பிட்ட புகார்கள் தொடர்பாக அந்தந்த மண்டல உதவி ஆணையர்கள் உரிய ஆய்வு செய்து அடுத்த கூட்டத்திற்குள் அப்பணிகளை சரி செய்ய வேண்டும். 37 ஆவது வார்டில் உடனடியாக ஒட்டுமொத்த துப்புரவுப் பணியை மேற்கொள்ள அந்த மண்டலத்தின் உதவி ஆணையருக்கு உத்தரவிடுகிறேன் என்றார்.
Last Updated on Wednesday, 27 February 2013 10:37