Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை ஏரிகளில் குறைந்து வரும் நீர்மட்டம்

Print PDF
தினமணி                   04.03.2013

சென்னை ஏரிகளில் குறைந்து வரும் நீர்மட்டம்


சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளின் முக்கிய நீர் ஆதாரங்களான பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது.

இதன் காரணமாக கோடை காலத்தில் மக்களுக்குத் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இருப்பினும் கோடை கால குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

பருவமழை பற்றாக்குறை: வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதன் விளைவாக மாநிலத்தின் முக்கிய நீர் ஆதாரங்களின் நீர்மட்டம் இந்த ஆண்டு உயரவில்லை. அக்டோபரிலிருந்து டிசம்பர் வரை சராசரியாக 44 செ.மீ. மழை பதிவாக வேண்டும். ஆனால் கடந்த வடகிழக்குப் பருவமழை காலத்தில் தமிழகத்தில் 37 செ.மீ. மழையே பதிவானது.

மேலும், கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டுத் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு ஆந்திர மாநிலம் வழங்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டில் நதிநீர் பங்கீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் முழுமையான அளவு தண்ணீரை ஆந்திரம் வழங்கவில்லை. மேலும், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயிலில் உள்ள வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்ததால் சென்னைக்கு வரும் நீர்வரத்து பெருமளவு குறைந்துள்ளது.

ஒரு மாதத்துக்குள் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 3 அடியும், சோழவரம் ஏரியின் நீர்மட்டம் 8 அடியும் குறைந்துள்ளது. புழல், செம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகளிலும் போதிய நீர் இருப்பு இல்லை. இதனால் கோடை காலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவலாம் என அஞ்சப்படுகிறது.

சென்னை மற்றும் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு குழாய் வழியாக 74.5 கோடி லிட்டரும், லாரி மூலமாக 2.2 கோடி லிட்டரும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதைத் தவிர தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் பயன்பாட்டுக்கு 6.4 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் நெம்மேலியில் ரூ.871 கோடி செலவில் அமைக்கப்பட்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை முதல்வர் அண்மையில் தொடங்கி வைத்தார். இதன் மூலம் மக்கள் பயன்பாட்டுக்காக நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் குடிநீர் கூடுதலாகக் கிடைத்துள்ளது.

திருவான்மியூர், வேளச்சேரி, பள்ளிப்பட்டு மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்கா பகுதிகளில் வசிக்கும் 15 லட்சம் மக்களின் பயன்பாட்டுக்காக இம்மாத இறுதிக்குள் நெம்மேலி குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

லாரிகள் மூலம் விநியோகம்: கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது எனவும், அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் கோடை கால குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக குடிநீர் வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், குடிநீர் பிரச்னைகள் குறித்து பொது மக்கள் வேறு சில கருத்துகளையும் தெரிவிக்கின்றனர்.

சீரான விநியோகம் தேவை: ""மாநகராட்சியில் 200 வார்டுகளிலும் குடிநீர் மற்றும் கழிவுநீர் பிரச்னைகள் உள்ளன. போதிய அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே நகரின் பல இடங்களில் குடிநீர் வருவதில்லை.

இது குறித்து புகார் அளித்தால் குடிநீர் வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. லாரிகள் மூலம் குடிநீர் பெற பதிவு செய்து 6 மாதங்கள் ஆனாலும் தண்ணீர் வருவதில்லை. குடிநீர் வாரியம் நிர்ணயித்த தொகையை விடக் கூடுதலாகக் கொடுப்பவர்களுக்கே லாரி குடிநீர் வழங்கப்படுகிறது'' என பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியது:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளொன்றுக்கு 83 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் ஏரிகளில் தற்போது உள்ள நீர் இருப்பு குடிநீர் விநியோகத்துக்குப் போதுமானதாக உள்ளது.

இதைத் தவிர மீஞ்சூர், நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் 20 கோடி லிட்டர் குடிநீர் கூடுதலாகக் கிடைக்கிறது. எனவே கோடை காலத்தில் சீரான குடிநீர் விநியோகத்தை எதிர்பார்க்கலாம் என்றனர்.
Last Updated on Monday, 04 March 2013 11:44