Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.32 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் கலெக்டர் ஜெகநாதன் தகவல்

Print PDF

தினத்தந்தி                20.03.2013

நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.32 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் கலெக்டர் ஜெகநாதன் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.32 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக திட்டக் குழு கூட்டத்தில் கலெக்டர் ஜெகநாதன் கூறினார்.

திட்டக்குழு கூட்டம்

நாமக்கல் மாவட்ட திட்டக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும், மாவட்ட ஊராட்சித்தலைவர் கே.காந்திமுருகேசன் , நாமக்கல் நகரத்தை புராதான நகரமாக அறிவித்தமைக்கும், நாமக்கல் மற்றும் நாமகிரிபேட்டை ஆகிய 2 இடங்களில் ரூ.1 கோடியே 67 லட்சத்து 52 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் விடுதி கட்ட உத்தரவிட்டமைக்கும் தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை வாசித்தார்.

அதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுசுகாதாரத்துறை, மருத்துவத்துறை, வருவாய்த்துறை என ஒவ்வொரு துறைகளின் மூலமும் நிறைவேற்றப்படும் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஜெகநாதன் பேசும்போது கூறியதாவது :

ரூ.32 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார்

நாமக்கல் மாவட்டம் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இந்த மாவட்டத்தின் குடிநீர் தேவையை போக்குகின்ற வகையில் ரூ.32 கோடிக்கு திட்ட மதிப்பீடுகள் தயாரித்து அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த நிதி வரப்பெற்றவுடன் போர்க்கால அடிப்படையில் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக திட்டக்குழு உறுப்பினர்கள், தங்கள் பகுதியின் அத்தியாவசியத்தை கருத்தில் கொண்டு கோரிக்கை வைத்தால் அங்கேயும் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும். மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் நிதி, ஒன்றிய குழு பொதுநிதி ஆகிய நிதிகள் அனைத்தும் குடிநீர் திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்க அறிவுறுத்தப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக முதல்அமைச்சரின் மாபெரும் மரம் நடும் திட்டத்தின் கீழ் 6500 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் தனி மின்விசை திட்டத்தின்கீழ் ரூ.10 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கூட்டுகுடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப்பணிகள் முடிவு பெற்றால் பெரும்பாலான கிராமங்கள் மற்றும் நகரப்பகுதிகள் முழுமையாக குடிநீர் வசதி பெறும். தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் ஜெகநாதன் பேசினார்.

இக் கூட்டத்தில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ஏ.பி.பழனிவேல், மாவட்ட ஊராட்சி செயலாளர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பி.ஆர்.சுந்தரம், மயில்சுந்தரம், மணி, ராணி, சாமிநாதன் உட்பட அனைத்து உறுப்பினர்கள் மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பூங்கா அமைக்க கோரிக்கை

கூட்டத்தில் மோகனூர் காவிரி ஆற்றில் தரைவழிப்பாலம் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட பூங்கா ஒன்று அமைத்து தர கேட்டுக்கொள்வது.இதேபோல் வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாட்டப்பன் கோவில் முதல் தற்காலிக பஸ் நிலையம் வரை மழைநீர் வடிகால் அமைக்க கோருவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.