Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.11.60 கோடியில் புதிய குடிநீர் திட்டம் ராட்சத குழாய் மூலம் சோதனை ஓட்டம்

Print PDF
தினமலர்         26.03.2013

ரூ.11.60 கோடியில் புதிய குடிநீர் திட்டம் ராட்சத குழாய் மூலம் சோதனை ஓட்டம்

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் நகராட்சியில், 11.60 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள புதிய குடிநீர் திட்டப்பணிக்காக, காவிரி ஆற்றில் இருந்து, ராட்சத குழாய் மூலம், தண்ணீர் எடுத்துச் சென்று, கசிவு ஏற்படுகிறதா என்பது குறித்து, சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பள்ளிபாளையம் நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. அவற்றில், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு, குடிநீர் வினியோகம் செய்வதற்காக, நகராட்சி நிர்வாகம் சார்பில், பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் நீர் உறிஞ்சி கிணறு அமைத்து, குழாய் மூலம் எடுத்து வரப்பட்டு, மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் ஏற்றி, பின்னர், தினமும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

அதற்காக, தினமும், 25 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து வரப்படுகிறது. இது பற்றாக்குறையாக இருப்பதால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். இந்நிலையில், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 11.60 கோடி ரூபாய் மதிப்பில், புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த, அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
அதை தொடர்ந்து, சமயசங்கிலி காவிரி ஆற்றில் நீர் உறிஞ்சி கிணறு அமைக்கப்பட்டது. அங்கிருந்து, ஐந்து கி.மீ., தூரத்துக்கு ராட்சத குழாய் மூலம் தண்ணீர் எடுத்துச் சென்று, அக்ரஹாரம் பம்பிங் ஸ்டேஷனில் சுத்திகரிப்பு செய்து, அங்கிருந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு எடுத்துச் சென்று, பின்னர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இப்பணி, தற்போது, 80 சதவீதம் முடிவடைந்துள்ளது.

இரண்டு நாட்களாக சோதனை பணி மேற்கொள்ளப்பட்டது. சமயசங்கிலி காவிரி ஆற்றில் இருந்து, அக்ரஹாரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பம்பிங் ஸ்டேஷன் வரை அமைக்கப்பட்டுள்ள ராட்சத குழாயில் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

அப்போது, குழாயில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுகிறதா, அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வருவது தடைபட்டுள்ளதா என்பது குறித்து, 300 மீட்டர் தூரத்துக்கு ஒரு முறை, இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை, எவ்வித பிரச்னையும் இல்லை.

இந்த புதிய குடிநீர் திட்டப் பணி முழுமையாக நிறைவடைந்தால், பள்ளிபாளையம் நகராட்சி மக்களுக்கு தடையின்றி தண்ணீர் சப்ளை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.