Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் வினியோகம் நிறுத்தம் பில்லூர் குழாயில் உடைப்பு

Print PDF
தினகரன்       06.04.2013

குடிநீர் வினியோகம் நிறுத்தம் பில்லூர் குழாயில் உடைப்பு


கோவை: பில்லூர் முதல் குடிநீர் திட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் நேற்று குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.

பில்லூர் முதல் குடிநீர் திட்டத்தின் மூலமாக கோவை மாநகராட்சிக்கு 6.5 கோடி லிட்டர் குடிநீர் தினமும் வினியோகம் செய்யப்படுகிறது. 22 பேரூராட்சி மற்றும் 534 வழியோர கிராமங்களுக்கு தினமும் 6.1 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தினமும் மொத்தமாக 12.6 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. நேற்று காலை வையம்பாளையம் பகுதியில் பிரதான குடிநீர் குழாயில் (1500 மி.மீட்டர் விட்டம் கொண்டது) உடைப்பு ஏற்பட்டது. இதில் சுமார் 10 லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகியது. குழாய் உடைந்த தகவல் தெரிந்ததும் பில்லூர் அணையில் நீர் எடுக்கும் பணி நிறுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து வையம்பாளையத்தில் குழாய் சீரமைக்கும் பணி நடக்கிறது. பணி முடிந்தும் இன்று காலை முதல் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என பில்லூர் குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் இக்பால் தெரிவித்துள்ளார். பில்லூர் அணையில் இருந்து விளாங்குறிச்சி மேல் நிலை நீர் தேக்க தொட்டி வரை 43 கி.மீ தூரத்திற்கு பிரதான குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 25 கி.மீ தூரத்திற்கு இரும்பு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதியில் கான்கிரீட் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. பில்லூர் அணையின் மின் தடை ஏற்படும் போதும், மின் அழுத்தம் குறையும் போதும் குழாயில் நீர் அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் காரணமாக கான்கிரீட் குழாய் விரிசல் விட்டு உடைந்து விடுவதாக தெரியவந்துள்ளது. ஜேசிபி மூலமாக மண்ணை தோண்டி குழாய் உடைப்பை சரி செய்யும் பணி நடக்கிறது.

குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டதால், நகரில் சிங்காநல்லூர், பீளமேடு, கணபதி, ராமநாதபுரம், கண்ணப்பநகர், ரத்தினபுரி, செட்டிபாளையம், வெள்ளலூர், மதுக்கரை, மலுமிச்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேற்று குடிநீர் வழங்கப்படவில்லை. வையம்பாளையத்திற்கு முன்புள்ள பகுதியில் இருந்து பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேற்று 10 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. பில்லூர் 2வது குடிநீர் திட்டத்தில் மாநகராட்சி பகுதிகளுக்கு நேற்று வழக்கம் போல் 6.5 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. சிறுவாணி அணையில் இருந்து 2.8கோடி லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்பட்டது.