Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை

Print PDF
தினமணி        09.04.2013

மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை


குடிநீர்த் திட்டங்களுக்காக மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்க ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நாமக்கல் நகர்மன்றத் தலைவர் ஆர்.கரிகாலன் தெரிவித்தார்.

நாமக்கல் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், அதிகரித்து வரும் குடிநீர் பற்றாக்குறை குறித்து நகர்மன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியதுடன், பிரச்னையைத் தீர்க்க நகராட்சிக்கு உள்பட்ட 39 வார்டுகளிலும் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதற்கு நகர்மன்றத் தலைவர் ஆர்.கரிகாலன் பதிலளித்து பேசியது:

நாமக்கல் நகராட்சிக்கு குடிநீர் விநியோகிக்க தற்போது 3 குடிநீர்த் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. காவிரி ஆற்றிலிருந்து நீர் எடுத்துவரப்படும் அந்தக் குடிநீர் திட்டங்களுக்காக மோகனூர் பகுதியில் ஆற்றில் 9 கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால், 9 கிணறுகளிலும் தண்ணீர் குறைந்துவிட்டது.

மேலும், மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் விநாடிக்கு 500 கனஅடி தண்ணீரை விவசாயத்துக்கும் பயன்படுத்துவதால் பரமத்திவேலூர் பகுதியிலேயே முடிந்துவிடுகிறது.

இதனால், மோகனூர் பகுதியிலிருந்து குடிநீர் ஆதாரங்களுக்கான தண்ணீர் குறைந்துவிடுகிறது.

இதனால் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறை பிரச்னையை அடுத்து குடிநீர் திட்டங்களுக்காக மட்டும் மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. தவிர, நகராட்சியின் 39 வார்டுகளிலும் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்றார் அவர்.