Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகர பகுதியில் தினமும் குடிநீர் வினியோகிக்க திட்டம்: கருணை காட்டினார் வருண பகவான்

Print PDF

தினமலர்                28.06.2013

மாநகர பகுதியில் தினமும் குடிநீர் வினியோகிக்க திட்டம்: கருணை காட்டினார் வருண பகவான்


கோவை: மழையின் கருணையால், சிறுவாணி மற்றும் பில்லூர் குடிநீர் திட்டங்களில் கிடைக்கும் குடிநீர் அளவு அதிகரித்துள்ளதால், மாநகரப்பகுதியில் தினமும் குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி, பில்லூர் குடிநீர் திட்டங்கள், கவுண்டம்பாளையம் - வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம், ஆழியாறு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கிடைக்கிறது. கடந்தாண்டு மழை பெய்யாததால், சிறுவாணி திட்டத்தில் குடிநீர் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. மாநகராட்சி தேவைக்கேற்ப குடிநீர் கிடைக்காததால், அனைத்து பகுதியிலும் குடிநீர் வினியோகம் பாதித்தது. சிறுவாணி குடிநீர் சப்ளை செய்த பகுதிகளுக்கு, பில்லூர் குடிநீர் இணைப்பு கொடுத்து, பிரச்னை ஓரளவுக்கு சமாளிக்கப்பட்டது. ஆனாலும், மாநகராட்சியில் மூன்று நாட்களுக்கு ஒருமுறையும், வடக்கு, கிழக்கு மண்டலத்திலுள்ள வார்டுகளில் வாரம் ஒருமுறையும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. தெற்கு மண்டலத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை, குடிநீர் வழங்கப்படுகிறது.
 
தற்போது மழைப் பொழிவால் சிறுவாணி அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், பில்லூர் அணை நிரம்பி விட்டதாலும் கோவைக்கு கிடைக்கும் குடிநீர் அளவு அதிகரித்துள்ளது. தற்போது சிறுவாணி திட்டத்தில் 67 மில்லியன் லிட்டர், பில்லூர் -1 திட்டத்தில் 65 மில்லியன் லிட்டர், பில்லூர் -2 திட்டத்தில் 55 மில்லியன் லிட்டர், ஆழியாறு திட்டத்தில் 7.5 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைத்துள்ளது. கோவை மாநகரத்துக்கு கிடைக்கும் குடிநீர் அளவு அதிகரித்துள்ளதால், தினமும் குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மாநகராட்சி துணை கமிஷனர் சிவராசு கூறுகையில், ""கோவை மாநகராட்சியில் 2,720 பொதுக்குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன; வீடு, அடுக்குமாடி குடியிருப்பு, வணிக வளாகம், தொழிற்சாலை குடிநீர் இணைப்புகள் 2.52 லட்சம் உள்ளன. தற்போது தேவைக்கேற்ப குடிநீர் கிடைப்பதால், சிறுவாணி குடிநீர் வினியோகம் சீராகியுள்ளது. மாநகராட்சியில் 27 வார்டுகள் சிறுவாணி குடிநீர் வழங்க முடியும்.
 
அதில், 20 வார்டுகளுக்கு முழுமையாக சிறுவாணி குடிநீர் தினமும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கவுன்சிலில் முடிவு செய்தவாறு, ஜூலை முதல் புதிதாக குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் துவங்கப்படும்,'' என்றார்.

தெற்கு மண்டலத்துக்கு வாரம் ஒரு முறை தான்!

மாநகராட்சி துணை கமிஷனர் சிவராசு கூறுகையில், "பில்லூர் திட்டத்தில் கிடைக்கும் குடிநீரை கொண்டு மற்ற வார்டுகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தெற்கு மண்டலத்தில் ஆழியாறு குடிநீர் பெறுவதை அதிகரிக்க முடியாததால், சிறுவாணி, பில்லூர் சப்ளையை அதிகரித்து, வாரம் ஒருமுறை குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.