தினமணி 31.07.2013
மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்த முடிவு
கோவை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சட்டவிரோதமான குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் 40 வார்டுகள் உள்ளன. பேரூராட்சிகளாகவும் ஊராட்சிகளாகவும் இருந்த பகுதிகள் மாநகராட்சி வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.
கோவை மாநகராட்சியைப் பொறுத்தவரையில் மொத்தம் 2.25 லட்சம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. இதில் சுமார் 80 ஆயிரம் இணைப்புகள் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் உள்ளன. இது தவிரப் பெரும்பாலான இணைப்புகள் உரிய அனுமதியின்றி பெறப்பட்டுள்ளன.
எனவே, விரிவாக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சியின் உதவி செயற்பொறியாளர்களைக் கொண்டு குடிநீர் இணைப்புகளைச் சோதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் சட்டவிரோதமான குடிநீர் இணைப்புகளைக் கண்டறிந்து அவற்றைத் துண்டிக்கலாம். இதனால் கூடுதலாகத் தண்ணீர் கிடைக்கும். மேலும் குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தும்போது மாநகராட்சிக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
இதனால் வரும் வாரங்களில் மாநகரின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்பு தொடர்பாக திடீர் சோதனை நடத்தப்படும் என்று மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.