தினகரன் 09.12.2013
ஆத்தூர் நகராட்சி பகுதியில் 16 நாட்களுக்கு ஒருமுறை காவிரி குடிநீர் விநியோகம்
ஆத்தூர், : ஆத்தூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் 16 நாட்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு, நகராட்சியின் மூலம் பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர், வீட்டு இணைப்புகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, மழை அதிக அளவில் பெய்துள்ள போதிலும் நகராட்சி பகுதியில் தேவையான அளவில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, நகராட்சியின் மூலம் வீட்டு குழாய்களில் காவிரி குடிநீர், 16 தினங்களுக்கு ஒருமுறை தான் விநியோகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டால், மேட்டூரிலிருந்து, நாள் ஒன்றுக்கு சராசரியாக 20 லட்சம் லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது. இது போதுமானதாக இல்லாத காரணத்தால், இவ்வாறு குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர். ஆனால், 16 நாட்களுக்கு ஒருமுறையும் குறைந்த அளவே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. முறையாக வழங்கப்படாத குடிநீருக்கு நகராட்சி நிர்வாகத்தால் கட்டணம் மட்டும் சரியாக வசூலிக்கப்படுகிறது. நகராட்சிக்கு செலுத்தும் குடிநீர் வரிக்கு, தனியார் வாகனங்களில் வாங்கும் அளவிற்கு கூட நகராட்சி குடிநீர் விநியோகம் செய்வதில்லை. இவ்வாறு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.