தினமணி 31.12.2013
ரூ.37 கோடி செலவில் குடிநீர் அபிவிருத்தித் திட்டம்
திருவண்ணாமலை நகராட்சியில் ரூ.37 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ள குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தை சென்னையில் இருந்தபடியே காணொலி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை நகராட்சியில் 1 லட்சத்து 49 ஆயிரத்து 500 பேர் வசிக்கின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கும் நோக்கில் ரூ.36 கோடியே 66 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இதையடுத்து, திங்கள்கிழமை கொடநாட்டில் இருந்தபடியே காணொலி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா இக்குடிநீர் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலையில் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி பகுதியில் விழா நடைபெற்றது.
இவ்விழாவில், ஆட்சியர் அ.ஞானசேகரன், நகர்மன்றத் தலைவர் என்.பாலச்சந்தர், ஆணையாளர் பெ.விஜயலட்சுமி, தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஜெயலலிதா பேரவையின் மாவட்டச் செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எம்.எஸ்.நைனாக்கண்ணு, ஒன்றிய செயலாளர் ஏ.கே.குமாரசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, குடிநீர் தொட்டிக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள குழாயில் மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் பொதுமக்கள் தண்ணீர் வழங்கினார்.
இது தவிர, திருவண்ணாமலை மாவட்டத்தில் புதுப்பாளையம் மற்றும் செங்கம் ஒன்றியங்களைச் சேர்ந்த மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் வகையிலான குடிநீர் திட்டங்களையும் திங்கள்கிழமை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.