தினமலர் 04.01.2014
ஆழியாறு குடிநீர் வினியோகம்: பேரூராட்சிக்கு அமைச்சர் ஆலோசனை
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பேரூராட்சி ஒன்றாவது வார்டு மக்களுக்கும், 15வது வார்டு பகுதி மக்களுக்கும், ஆழியார் குடிதண்ணீர் வழங்க வேண்டும். குறுகலான ரோட்டினை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, இப்பகுதியை வேளாண்மைத்துறை அமைச்சர் தாமோதரன், செயல் அலுவலர் ரவிக்குமார், பொறியாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் பார்வையிட்டனர். அதில், மலை மேல் வசிக்கும் மக்களுக்கு மூன்று இடங்களில் தொட்டி கட்டியும், 15வது வார்டில் மேல்நிலை தொட்டியின் கீழ் நீர் தேக்கத்தொட்டி கட்டி, அதில் மோட்டார் பொருத்தி மலை மேல்பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லவும், கான்கிரீட் ரோடு அகலப்படுத்தவும், 42 லட்சம் ரூபாய் தேவைப்படும்.
இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, வேளாண் துறை அமைச்சர், செயல் அலுவலருக்கு ஆலோசனை வழங்கினார். மேலும், 15 வார்டான தேரோடும் வீதியில், 12 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தையும், ரேஷன் கடை அருகில் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் குழந்தைகள் அங்கன்வாடி மையம், சிவலோகநாதர் கோவில் முன்புறத்தில் இருந்து சார்பதிவாளர் அலுவலகம் வரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்படும் கழிவு நீர் சாக்கடையையும் பார்வையிட்டனர்.