தினமணி 29.01.2014
மாநகராட்சி குடிநீர்த் திட்டம்: ஜப்பான் அதிகாரிகள் பார்வை
கோவை மாநகராட்சியின் பில்லூர் இரண்டாவது குடிநீர்த் திட்டத்தை ஜப்பான் நாட்டு குடிநீர் வாரிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டனர்.
கோவைக்கு குடிநீர் வழங்கும் திட்டங்களில் பில்லூர் இரண்டாவது குடிநீர்த் திட்டமும் ஒன்று. இத்திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012-ஆம் ஆண்டு ஜன. 24-ஆம் தேதி துவங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் கோவைக்கு நாளொன்றுக்கு 63 எம்.எல்.டி. தண்ணீர் கிடைக்கிறது. இத்திட்டம் சுரங்கப்பாதை வழியாகச் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தை பவர் பாயின்ட் மூலம் ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளர் ஞானேஸ்வரன், ஜப்பான் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு விளக்கினார்.
கோவை மாநகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்கான தொழில்நுட்ப உதவிகளை ஜப்பானிடம் இருந்து பெற உள்ளதாகவும், இங்குள்ள குடிநீர்த் திட்டங்கள் குறித்து ஜப்பான் அலுவலர்களுக்கு விளக்கப்பட்டதாகவும் ஆணையர் ஜி.லதா தெரிவித்தார்.
ஜப்பான் குடிநீர் வாரியத்தின் செயல் இயக்குநர் சுகனோ தகாஷி தலைமையில் 4 பேர் கோவைக்கு வந்து பில்லூர் இரண்டாவது குடிநீர்த் திட்டம் குறித்துத் தெரிந்து கொண்டனர்.