தினகரன் 01.02.2014
இனி திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் சுவையானகுடிநீர் கிடைக்கும் சுத்திகரிப்பு கலன் அமைக்க ரூ.19 லட்சம் ஒதுக்கீடு
திண்டுக்கல், : திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.19 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் தலைநகராக விளங்கும் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்வோருக்கு கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வில்லை என பொதுமக்கள் மத்தியில் பரவலான குற்றச்சாட்டு உள்ளது. பயணிகள், தனியாருக்கு சொந்தமான கட்டண கழிவறையை பயன்படுத்தி வருகின்றனர்.
பஸ் ஸ்டாண்டில் ஒரே ஒரு இடத்தில் சின்டெக்ஸ் தொட்டி வைத்து தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இதில் ஒரு சில நேரங்களில் மட்டுமே தண்ணீர் வரும். சுத்தமான குடிநீர் கிடைக்காததால் கூடுதல் விலை கொடுத்து தண்ணீர் பாட்டில் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார் சென்றது.
இதையடுத்து பஸ் ஸ்டாண்டை நவீனப்படுத்தி அடிப்படை வசதிகளை செய்து தர நகராட்சி துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன் நவீன வசதிகளுடன் கூடிய ஆண், பெண் இலவச கழிவறை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க இரண்டு சுத்திகரிப்பு கலன் பஸ் ஸ்டாண்டிற்குள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக நகராட்சி ரூ.19 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், பயணிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஓரிரு வாரத்திற்குள் சுத்திகரிப்பு குடிநீர் கலன் அமைக்கப்படும் என்றார்.