தினமணி 19.12.2009
குடியாத்தம் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு
குடியாத்தம், டிச. 18: குடியாத்தம் நகரில் குடிநீர்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது என நகர்மன்றத் தலைவர் (பொறுப்பு) எஸ். சௌந்தரராஜன் கூறினார்.
கடந்த 6 மாதங்களாக செயல்படாமல் இருந்த நகர்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் சௌந்தர்ராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
30 நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில், மன்ற ஒப்புதலுக்கு வைக்கப்பட்ட 194 தீர்மானங்களில் 166 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத் துவக்கத்தில் பேசிய சுயேச்சை உறுப்பினர் எஸ். மோகன், முன்னாள் தலைவர் ஆர்.எஸ். சிவப்பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதால் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு ஒட்டுமொத்த உறுப்பினர்க
ளும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்து விட்டு வெளியேறினார்.
நகரில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ரூ. 24 லட்சத்தில் நகராட்சிக்கு ஜேசிபி இயந்திரம் வாங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
நகராட்சி மூலம் முன் அறிவிப்பு செய்துவிட்டு நகரில் உள்ள 36 வார்டுகளுக்கும் தலைவர் மற்றும் அதிகாரிகள் குறிப்பிட்ட நாளில்நேரிடையாகச் சென்று பொதுமக்களிடம் குறை கேட்கவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
துப்புரவுப்பணி மற்றும் தெருவிளக்கு பராமரிப்பை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார் சௌந்தரராஜன்.
ஆணையர் ஆர். சுப்பிரமணியன், மேலாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.