தினமணி 23.12.2009
ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர்
சிவகாசி, டிச. 22: சிவகாசி நகராட்சியில் பரீச்சார்த்தமாக ஒரு பகுதியில் மட்டும் டிசம்பர் 28-ம் தேதி முதல் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகர்மன்றத் துணைத் தலைவர் ஜி.அசோகன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
சிவகாசி நகராட்சியில் தற்போது 7 குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் உள்ளன. இதின் கொள்ளளவு 38 லட்சம் லிட்டர் ஆகும். வெம்பக்கோட்டை ஆணைப் பகுதியிலிருந்து 2005-2006-ம் ஆண்டு தினசரி 30 முதல் 40 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைத்து வந்தது.
2007-ம் ஆண்டு மானூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்ட பின்னர், அத் திட்டத்தின் கீழ் தினசரி 20 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கப் பெற்றது. தற்போது இத் திட்டத்தின் கீழ் மட்டும் தினசரி 40 முதல் 45 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் பரீச்சார்த்தமாக எம்.ஜி.ஆர். திடலில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியிலிருந்து விநியோகிக்கப்படும் பகுதிக்கு, டிசம்பர் 28-ம் தேதி முதல் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
இதன் மூலம் நகராட்சிப் பகுதியில் ஆறு ஏரியாவிற்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஆறு நாளைக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போதுள்ள ஆறு ஏரியாவை, நான்கு ஏரியாவாகப் பிரித்துள்ளோம் என்றார்.
சாமிபுரம் காலனி, முருகன் காலனி, சோலை காலனி ஆகியவை ஒரு ஏரியாகாவும், பார்த்தசந்திரன் லேவுட், புதுத்தெரு, புஷ்பா காலனி ஆகிவை ஒரு ஏரியாகவும், சுப் பிரமணியபுரம் காலனி ஒரு ஏரியாகவும், பாரதி நகர் ஒரு ஏரியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் ஏரியாவில் 230 குடிநீர் இணைப்புகளும், இரண்டாவது ஏரியாவில் 579 இணைப்புகளும், மூன்றாவது ஏரியாவில் 350 இணைப்புகளும், நான்காவது ஏரியாவில் 280 இணைப்புகளும் உள்ளன என்றார் அவர்.
இந்த பகுதியில் ஒருநாள் விட்டு ஒருநாள் ஒரு மணி நேரம் குடிநீர் விநியோகிப்படும். பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்புத் தர கேட்குக் கொண்டார். மேலும் படிப்படியாக நகராட்சி முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்நிகழ்ச்சியின் போது நகர்மன்றத் தலைவர் ராதிகாதேவி, ஆணையாளர் விஜயராகவன், பொறியாளர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.