தினமணி 06.01.2010
அந்தியூர் தொகுதியில் கோடையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சிற்றூராட்சித் தலைவர்களுக்கு அழைப்பு
பவானி, ஜன.5: அந்தியூர் தொகுதிக்குள்பட்ட அனைத்து சிற்றூராட்சிப் பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் தேவையான பணிகள் குறித்து பட்டியல் தயாரித்து வழங்குமாறு அந்தியூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.குருசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி : தற்போதைய சூழலில் பருவமழை பொய்த்து விட்ட காரணத்தால் வரும் கோடைகாலத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, அந்தியூர் தொகுதிக்குள்பட்ட 25 சிற்றூராட்சிகள் மற்றும் 4 பேரூராட்சிப் பகுதிகளிலும் குடிநீர் தேவையை மேம்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.
எனவே, அனைத்து சிற்றூராட்சிகளின் தலைவர்களும் தங்களது பகுதியில் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆழ்குழாய்களுடன் மேல்நிலைத் தொட்டிகள் கட்டுதல், ஆற்றுநீர் வழங்கப்படாத பகுதிகளில் குழாய்கள் அமைத்து குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும்.
வரும் கோடை காலத்தில் ஏற்பட்டும் இந்நிலையைப் போக்க தங்களின் தேவை குறித்த பட்டியல் தயாரித்து வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.