தினமணி 12.01.2010
சேதமடைந்த குடிநீர்க் குழாய் சீரமைக்கும் பணி ஆய்வு
திண்டுக்கல், ஜன. 11: திண்டுக்கல் நகரில் இருவேறு இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், அவற்றைச் சீரமைக்கும் பணியை துரிதப்படுத்தும் வகையில், நகர்மன்றத் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் நகருக்கு ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் இருந்து, குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதில், திண்டுக்கல் பெரிய கடைவீதிப் பகுதியில் பாதாளச் சாக்கடைக்காக தோண்டப்பட்டிருந்த இடத்தில் குழாய் உடைந்தது. இதேபோல, பெரியார் சிலை அருகே உள்ள குடிநீர்க் குழாயிலும் உடைப்பு ஏற்பட்டது. இதனால், நகரில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சேதமடைந்த குழாய்களைச் சீரமைக்கும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.
இப்பணிகளை திங்கள்கிழமை நகர்மன்றத் தலைவர் ஆர். நடராஜன், நகராட்சி ஆணையர் அர. லட்சுமி, பொறியாளர் ராமசாமி ஆகியோர் பார்வையிட்டு விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினர்.