தினமணி 25.01.2010
ஸ்ரீவிலி.யில் குடிநீர் தொட்டி திறப்பு விழா
ஸ்ரீவில்லிபுத்தூர், ஜன. 24: ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற 21-வது வார்டில் குடிநீர்த் தொட்டி திறப்பு விழா நகராட்சி ஆணையாளர் முத்துக்கண்ணு தலைமையில் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர்த் தொட்டியை திறந்து வைத்து மடவார்வளாகம் அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர் மாயாண்டி பேசினார். அவர் பேசுகையில், திமுக அரசு நெசவாளர்களுக்கு அமுல்படுத்தியுள்ள நலத் திட்டங்களை விளக்கினார்.
மேலும் கருணாநிதி, ஏழைகள், நெசவாளர், மேலும் தேவையில் உள்ள மக்களின் வாழ்வாதரத்தை பெருக்கும் வகையில் ஒவ்வொரு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். மாவட்டத்தில் உள்ள இரு அமைச்சர்களும் மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், நகரின் வளர்ச்சிக்காவும் திட்டங்களை நிறைவேற்றி வருவதாயும் மாயாண்டி கூறினார்.
நிகழ்ச்சியில் திமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் கு.வெங்கட்ராமன், நகராட்சி பொறியாளர் பெரியசாமி மற்றும் முதலியார்பட்டித் தெருவின் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.