தினமலர் 28.01.2010
சுகாதாரமான தண்ணீருக்கு உறுதி
கூடலூர் : ""மேல் கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு, சுகாதாரமான தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது,'' என கூடலூர் ஆர்.டி.ஓ., தெரிவித்தார்.மேல் கூடலூர், கே.கே., நகர், குறிஞ்சி நகர், நடுகூடலூர், ஹெல்த்கேம், தோட்டமூலா பகுதி மக்களுக்கு, மேல்கூடலூர் கல்லடி ஆற்று நீர் வினியோகிக்கப்பட்டது. ஆற்றில் நீர் வரத்து குறைந்துள்ளதால், தடுப்பணைக்கு கீழ் வழிந்தோடும் ஆற்று நீரை ரப்பர் குழாய் மூலம் உறிஞ்சி, மேல்கூடலூர், கே.கே., நகர் பகுதிக்கு செல்லும் குழாயுடன் இணைக்கப்பட்டது. குழாய் இணைக்கப்பட்ட பகுதி சுத்தப்படுத்தப்படாமல் இருந்ததால், பயன்படுத்தும் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.
நேற்று மாலை, கூடலூர் ஆர்.டி.ஓ., ஹரிகிருஷ்ணன், தாசில்தார் ரெங்கநாதன், வி.ஏ.ஓ., வேலாயுதம், உதவியாளர் சந்திரபோஸ், இப்பகுதியை ஆய்வு செய்தனர்; நகராட்சி ஊழியர்களும் உடனிருந்தனர்.ஆர்.டி.ஒ., ஹரிகிருஷ்ணன் கூறுகையில், ""தடுப்பணை அருகேயுள்ள நீர் சுத்திகரிக்கும் இரு தொட்டிகளை சுத்தம் செய்யவும், தொட்டி மேல் கம்பி வலை, கொசு வலை அமைத்து, சுகாதாரமான தண்ணீர் வினியோகிக்க நகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கம்பி வேலி, அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த ஆண்கள் பயன்படுத்த கழிப்பிடம் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.