தினமணி 01.02.2010
ஆலந்தூரில் ரூ.67 கோடியில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணி
காஞ்சிபுரம், ஜன. 31: காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர் நகராட்சி தில்லை கங்கா நகரில் ரூ.66.86 கோடி மதிப்பீட்டிலான குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்துக்கான பணிகளை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.
÷ஜவாஹர்லால் நேரு தேசிய புனரமைப்பு திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் இத் திட்டத்துக்கான பணிகளை சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் துறை செய்ய உள்ளது.
÷இப் பணிகளுக்கான தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கே. மிஸ்ரா தலைமை வகித்தார். ஆலந்தூர் நகர்மன்றத் தலைவர் துரைவேல், முன்னாள் தலைவர் ஆர்.எஸ். பாரதி, துணைத் தலைவர் சந்திரன், சென்னை குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் ராதாகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் மனோகரன், பொறியாளர் மகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
÷இத் திட்டம் செயல்படுத்தப்பட்டவுடன் இப் பகுதிகளில் குடிநீர் பிரச்னை தீரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்