Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீரின்றி தவிக்கும் மாநகராட்சி 41வது வார்டு மக்கள்

Print PDF

தினமணி 04.02.2010

குடிநீரின்றி தவிக்கும் மாநகராட்சி 41வது வார்டு மக்கள்

திருப்பூர், பிப்.3: லாரிகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் நிறுத்தப்பட்டதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட மாநகராட்சி 41வது வார்டு பொதுமக்கள் திருப்பூர் தாராபுரம் சாலையிலுள்ள நீரேற்று நிலையத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி 41வது வார்டுக்கு உட்பட்ட கோம்பைத்தோட்டம் பகுதியில் 250க்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளா உள்ளதால் இப்பகுதியில் போதுமான அடிப்படை வசதிகள் செய்துதரப்படாததுடன், லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந் நிலையில், கடந்த 5 நாட்களுக்கும் மேலாக இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் இருந்ததால் அப்பகுதி மக்கள் பெருமளவில் பாதிப்படைந்தனர்.

மேலும், அப்பகுதியில் சாக்கடை கால்வாய், சாலை பணிகளும் முறையாக செய்துதரப்படாமலும் உள்ளன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி நிர்வாகத்துக்கு வலியுறுத்தியும் இப்பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட கோம்பைத்தோட்டம் பொதுமக்கள் புதன்கிழமை தாராபுரம் சாலையிலுள்ள நீரேற்று நிலையத்தை முற்றுகையிட்டனர். மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று முற்றுகைப் போராட்ட த்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சு நடத்தினர்.

முறைப்படி லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படும் என்றும், விரைவில் கோம்பைத்தோட்டம் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தனர். இதையடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.

Last Updated on Thursday, 04 February 2010 11:06