Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மார்ச் 1 முதல் தடையின்றி குடிநீர் வழங்கப்படும்

Print PDF

தினமணி 04.02.2010

மார்ச் 1 முதல் தடையின்றி குடிநீர் வழங்கப்படும்

ராமநாதபுரம், பிப். 3: ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் மார்ச் 1 ஆம் தேதி முதல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் தங்கு தடையின்றி குடிநீர் வழங்கப்படும் என ஆட்சியர் த.. ஹரிஹரன் புதன்கிழமை தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பான பணிகளை பரமக்குடி, பார்த்திபனூர், கமுதி, கடலாடி ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் புதன்கிழமை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

பரமக்குடி நகர் எமனேசுவரத்தில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தைப் பார்வையிட்டு, அங்கிருந்து ஜீவா நகர், பாரதி நகர் ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதையும் பார்வையிட்டார். இந்த நீரேற்று நிலையம் மூலம் பரமக்குடி நகராட்சிப் பகுதிகளுக்கு நாள்தோறும் 62.34 லட்சம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருதல் தொடர்பான செயல்முறைகள் குறித்து விசாரித்தார்.

பார்த்திபனூரில் அமைந்துள்ள 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, அச்சங்குளத்தில் செயல்பட்டு வரும் நீரேற்று நிலையம் ஆகியவற்றையும் பார்வையிட்டார். கமுதி ஒன்றியம் கோவிலாங்குளத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்துள்ளதால், அதனை இடித்து புதிதாக மற்றொரு தொட்டி நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்ட அதற்கான கருத்துரு தயாரிக்க ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.

கடலாடி ஒன்றியம், காணிக்கூர் ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து நீர் வழங்கும் குழாய்கள் அமைக்கப்படாமல் உள்ளதால், அவற்றை விரைவில் அமைத்து மக்களுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யும்படி ஊராட்சி மன்றத் தலைவருக்கு அறிவுரை வழங்கினார்.

மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பான பணிகள் அனைத்தையும் நிறைவு செய்து மார்ச் 1 ஆம் தேதி முதல் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யும்படி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

ஆட்சியருடன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் நாகநாதன்,திருமலைக்குமார்,உதவி செயற்பொறியாளர் அய்யம்பெருமாள்,உதவிப் பொறியாளர் சூரிய நாராயணன்,இளநிலைப் பொறியாளர் செல்லமுத்து உள்பட அதிகாரிகள் பலரும் வந்திருந்தனர்.

Last Updated on Thursday, 04 February 2010 11:24