தினமணி 09.02.2010
குடிநீர்ப் பிரச்னை மனுக்கள் மீது தனி கவனம்
நாமக்கல், பிப். 8: குடிநீர்ப் பிரச்சினை தொடர்பாக வழங்கப்படும் மனுக்கள் மீது அந்தந்த அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் சகாயம் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடந்தது.
இக் கூட்டத்துக்கு ஆட்சியர் சகாயம் தலைமை வகித்தார். தனித்துணை ஆட்சியர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். பல்வேறு துறையைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 415 மனுக்கள் பெறப்பட்டன. பெரும்பாலானவை முதியோர் உதவித் தொகை, ஆதரவற்றோர் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை, போக்குவரத்து வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி, கல்வி கடன் கோரி வந்திருந்தன. இந்த மனுக்கள் அனைத்தும் அந்தந்த துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து 15 நாட்களுக்குள் உரிய பதில் அளிக்க வேண்டும் என ஆட்சியர் சகாயம் அறிவுறுத்தினார். மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணத்தையும் மனுதாரருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
புதிய குடும்ப அட்டை கோரிய மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து உடனடியாக குடும்ப அட்டை வழங்க வேண்டும். குடிநீர்ப் பிரச்சினை தொடர்பாக மனுக்கல் வரப்பெறறால் அவற்றின் மீது தனி கவனம் செலுத்தி விரைந்து தீர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆட்சியர் சகாயம் உத்தரவிட்டார்.
இந்திய குழந்தைகள் நலச் சங்கத்தின் சார்பில் நடந்த மாநில அளவிலான ஓவியப் போட்டியில் முதலிடம் பெற்ற கிரீன்பார்க் பள்ளி 5-ம் வகுப்பு மாணவி ஜனனிக்கு ரூ. 300-ம், 2-வது இடம் பெற்ற குமாரபாளையம் நேரு நினைவு சம்பூர்ணியம்மாள் உடல் ஊனமுற்றோர் பள்ளி 7-ம் வகுப்பு மாணவர் கௌரிசங்கருக்கு ரூ. 200-ம் பரிசாக வழங்கப்பட்டது.