தினமலர் 15.02.2010
ஆறுமுகநேரி பகுதியில் குடிநீர் பிரச்னை :எம்எல்ஏ ஆலோசனை
திருச்செந்தூர் ஆறுமுகநேரி பகுதி குடிநீர் பிரச்னையைத் தீர்க்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் எம்எல்ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை செய்தார்.
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறுமுகநேரி டவுன் பஞ்.,சில் புதிய குடிநீர் இணைப்பு வழங்குவது குறித்து பொதுமக்களுக்கும், டவுன் பஞ்., மற்றும் நிர்வாகத்திற்கு இடையே பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு அடிப்படை வசதிகளான சாலை, தெருவிளக்கு உள்ளிட்டவைகளை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளிடம் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை செய்தார். திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து ஆறுமுகநேரி டவுன் பஞ்., நிர்வாக அதிகாரி தாணு மூர்த்தி, பொறியாளர் நக்கீரன், மின் விநியோக பொறியாளர் அப்துல்லா ஆகியோரிடமும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தூத்துக்குடி பராமரிப்புக் கோட்டைத்தைச் சேர்ந்த நிர்வாக பொறியாளர் கிருஷ்ணன், உதவி நிர்வாக பொறியாளர் தாணுலிங்கம், உதவிப் பொறியாளர் பாலசுப்பிரமணியம், திருச்செந்தூர் வட்டாட்சியர் இளங்கோ, ஆறுமுகநேரி டவுன் பஞ்., கவுன்சிலர்கள் கல்யாணசுந்தரம், ஜெயராஜ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை குறித்து எம்எல்ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாவது;
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறுமுகநேரி டவுன் பஞ்.,ல் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, தெருவிளக்கு குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த மனுக்கள் சம்பந்தமாக தீர்வு காண்பதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினோம். மேலும் தொகுதிக்குட்பட்ட புன்னக்காயல் பகுதியில் அடிக்கடி ஏற்படும் குடிநீர் குழாய் உடைப்பிற்கு தீர்வு காண்பதற்காகவும், ஆத்தூர் பகுதி மக்கள் மாதாந்திர மின் கட்டணம் செலுத்த அருகிலுள்ள ஆறுமுகநேரிக்கும் மற்றும் குலசை., பகுதி மக்கள் உடன்குடிக்கும் வரவேண்டியதிருப்பதால் அவர்களின் நலன் கருதி அந்தந்த ஊர்களிலே மின் கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். மக்கள் பிரச்னைகளை தீர்க்க, முதல்வர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் கூறினார். நிகழ்ச்சியின் போது திருச்செந்தூர் விஏஓ., பாலசுப்பிரமணியம், திருச்செந்தூர் திமுக நகர செயலாளர் கோபால், கிருபா, கானம் டவுன் பஞ்., தலைவர் செந்தமிழ் சேகர், காயல்பட்டணம் கவுன்சிலர் சுகு ஆகியோர் உடன் இருந்தனர்.