தினமலர் 15.02.2010
சீரான நீர் வினியோகம் பேரூராட்சியில் தீர்மானம்
மஞ்சூர்:கீழ்குந்தா பேரூராட்சி வார்டு பகுதிகளில், நீர் வினியோகத்தை முறைபடுத்த தீர்மானிக்கப்பட்டது.கீழ்குந்தா பேரூராட்சியின் 15 வார்டுகளில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மக்களுக்கு, அம்மக்கல், ஊசிமலை, கட்லாடா நீராதாரத்திலிருந்து நீர் வினியோகிக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் குழாய்கள் அமைக்கப்பட்டதால், உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாகிறது.பிரச்னையை மையப்படுத்தி, 9,10ம் வார்டை சேர்ந்த மட்டக்கண்டி மக்கள், சமீபத்தில், தாலுகா அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த, கீழ்குந்தா பேரூராட்சி அலுவலகத்தில், பேரூராட்சி தலைவர் ஆஷா தலைமையில் அவசர கூட்டம் நடத்தப்பட்டது.செயல் அலுவலர் (பொ) ஜெயராமன், துணைத் தலைவர் பாபு முன்னிலை வகித்தனர். அனைத்து வார்டுகளுக்கும் சீராக நீர் வினியோகிக்க, குறைந்தபட்ச தேவை திட்டத்தின் கீழ், குடிநீர் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.