தினமணி 15.02.2010
கிருஷ்ணா கால்வாயில் நீர்வரத்து அதிகரிப்பு: சென்னைக்கு குடிநீர் திறப்பு
திருவள்ளூர், பிப். 14: ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதையடுத்து, தற்போது கிருஷ்ணா கால்வாயில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.சென்னை குடிநீரின் முக்கிய ஆதாரமாகத் திகழ்ந்துவரும் பூண்டி ஏரியில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவந்தது.
இதையடுத்து, தமிழக அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில், கடந்த 30-ம் தேதி 1990 கன அடி நீர் ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்டது.
திறக்கப்பட்ட நீர் கிருஷ்ணா கால்வாய் வழியாக கடந்த 1-ம் தேதி வினாடிக்கு 30 கன அடியாக தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டுக்கு வந்ததடைந்தது. மறுநாள் காலை வினாடிக்கு 50 கன அடியாக பூண்டி ஏரியை வந்தடைந்தது. தொடர்ந்து கிருஷ்ணா கால்வாயில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 520 கன அடியாக நீர்வரத்து உள்ளது. தற்போது பூண்டி ஏரியில் மொத்த உயரமான 35 அடியில் 28.72 அடி உயரத்துக்கு நீர் மட்டம் உள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து லிங்க் கால்வாய் வழியாக வினாடிக்கு 301 கனஅடி தண்ணீரும், மழலைக் கால்வாய் வழியாக வினாடிக்கு 30 கன அடி தண்ணீரும் சென்னை குடிநீருக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.